தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு, தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: ஐவரின் கையொப்பங்களுடன் அறிக்கை வெளியீடு
‘தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், அந்தச் சங்கத்தின் ஒட்டுமொத்த அங்கத்தவர்களின் அபிப்பிராயம் அல்ல’ என, அந்தச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஐவர் கையொப்பமிட்டு ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் போன்றோரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக, நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
இதன் மூலம் ஊடகவியலாளர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே முரண்பாட்டினை ஏற்படுத்துவதற்கு, ஆசிரியர் சங்கத்தின் சில உறுப்பினர்கள் முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது – ஆசிரியர் சங்கத்தின் ஒட்டுமொத்த அங்கத்தவர்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் கூட்டப்பட்டதல்ல. இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறைப்படியான விண்ணப்பம் எதனையும் ஆசிரியர் சங்கம் முன்வைக்கவில்லை.
இதன் காரணமாகவே குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் குறித்த நேரத்தில் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக எல்லைக்குள் அனுமதிக்கப்படவுமில்லை.
ஊடகவியலாளர் சந்திப்பில் ஆசியர் சங்க தலைவர் முன்வைத்த கருத்துகளுக்கும் ஆசிரியர் சங்க அங்கத்தவர்களுக்கும் இடையே எந்தத்தொடர்பும் இல்லை. இக்கருத்து தலைவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி ஆசிரியர் சங்கத்தின் முழுமையான கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதை மிகுந்த பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.
தொடர்பான செய்திகள்:
02) தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு