கண்டி வன்முறை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் 151 பேர் முறைப்பாடு

🕔 May 12, 2018

ண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர்  தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளதாக, அந்த ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கண்டி  வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.ரி.வி. வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்;

“எங்களிடம் 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 100 பேரிடம் நேரில் பார்த்த சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம்.

கண்டி வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

அனைத்து தகவல்களையும், தரவுகளையும் ஆராய்ந்த பின்னர் நாங்கள் அறிக்கையொன்றை தயாரிப்போம். எங்கள் அறிக்கையில் பரிந்துரைகளும் காணப்படும்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்போம்.

இந்த வன்முறைகள் ஏன் இடம்பெற்றன, யார் இதனை தூண்டினார்கள், அரச அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனரா என்ற கோணங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்