சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை மறுசீரமைக்க, நடவடிக்கை முன்னெடுப்பு
– யூ.கே. காலித்தீன் –
சாய்ந்தமருது- மாளிகைக்காடு பள்ளிவாசலின் நிருவாகத்தை மறுசீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேற்படி பள்ளிவாசலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைக் கோரிக்கையினை செயற்திறனான முறையில் முன் கொண்டு செல்வதற்காகவும், ஊரின் சமூகப் பொருளாதார விடயங்களை சரியான முறையில் எதிர்கொள்ளும் வகையிலும் இந்த மறுவீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய இச்சீரமைப்புத் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கென இதன்போது குழுவொன்று அமைக்கப்பட்டது.
சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில், சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.எம். சலீம் சர்க்கி, சட்டத்தரணி அஷ்ஷேஹ் என்.எம். முஜிப் நளிமி மற்றும் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம். சதாத் ஆகிய 04 பேர் மேற்படி குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
குறித்த குழுவினர் தமதுஅறிக்கையினை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா வேண்டுகோள் விடுத்தார்.