ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார்
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பி. திசாநாயக ஆகியோர் 02 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பிரபலமான சொகுசு ஹோட்டலொன்றில் வைத்து இவர்கள் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கம்பனியொன்றின் பங்குகள் தொடர்பான காரியமொன்றினை முடித்துக் கொடுக்கும் பொருட்டு, நபரொருவரிடமிருந்து இவர்கள் 10 கோடி ரூபாய் லஞ்சம் கோரியதாகவும், அதில் ஒரு பகுதியான 02 கோடி ரூபாவினை பெற்றுக் கொண்ட போதே, இவர்கள் கைதானதாகவும் அறிய முடிகிறது.
கலாநிதி ஐ.எச்.கே. மஹாநாம – முன்பு காணியமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய நிலையில், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி எனும் செல்வாக்கு மிக்க பதவிக்கு அண்மையில் நியமனமானார்.