அரசியல்வாதியின் ‘காசு தன்சல’: இலங்கையில் முதல் தடவை
வெசாக் தினத்தை முன்னிட்டு பணத்தை தானமாக வழங்கும் ‘காசு தன்சல’ ஒன்றினை, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனி சாந்த குணசேகர நடத்தினார்.
பௌத்தர்களின் புனித நாட்களில் ஒன்றான வெசாக் தினத்தையொட்டி அன்னதானம், நீராகார தானம் போன்றவற்றினை மக்களுக்கு வசதி படைத்த தனி நபர்களும், அமைப்புகளும் வழங்குவது வழமையாகும். இதனை ‘தன்சல’ என்று அழைப்பர்.
இந்த நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்த குணசேகர, மாவனல்லையிலுள்ள தனது வீட்டுக்கு முன்னால் நேற்று ஞாயிற்றுக்கிழமை, ‘காசு தன்சல’ ஒன்றினை நடத்தினார்.
இதன்போது பொதுமக்களுக்கு 100 ரூபாய் பணத்தினை, சுமார் 02 மணி நேரம் தொடர்ச்சியாக இவர் வழங்கியுள்ளார்.
மக்களுக்கு பணத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் இவ்வாறு ‘காசு தன்சல’ நடைபெற்றமை, இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.