திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம்

🕔 April 28, 2018
நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் 03 மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மத்திரிபால சிறிசேனவும் சிறப்பு அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டனர்.
இதன்போது நடைபெற்ற கலாசார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறுகையில்;
“முஸ்லிம்களுக்கு தனியான பாடசாலை இருக்கத்தான் வேண்டுமா என்று கேட்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாட்டில் நடக்கின்ற இனமுறுகலும் இனப்பிரச்சினைக்கும் இன ரீதியான பாடசாலைகள் காரணமாகிவிட்டது என்று சிலர் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுகின்றனர்.
முஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்பட்டதற்கான வரலாறு தெரியாமல், அவர்கள் வேறு சமூகங்களிலிருந்து பிரிந்து வாழும் நோக்கத்தில்தான் இப்படியான பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்‌ளதான பிரமையை – மாற்று சமூகத்தினர் கொண்டிருக்கின்றனர். இதற்கான விளக்கத்தை யாரும் கொடுப்பது கிடையாது.
இன ரீதியான பாடசாலைகள் தோற்றம்பெற்றதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாடசாலைகளில் கிறிஸ்தவம் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், இந்து மற்றும் பெளத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களது சமய விழுமியங்களை காப்பற்றும் நோக்கில் தனியான பாடசாலைகளை அமைத்தன.
இந்தப் பின்னணியில்தால், முஸ்லிம்களின் கல்விச்சூழலில் மாற்று சமூகத்தின் கலாசார விழுமியங்கள் ஊடுருவாமல் பாதுகாக்கும் நோக்கில்தான் முன்னோர்களினால் இஸ்லாமிய சூழல்கொண்ட முஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்பட்டன.
நாட்டில் இலவசக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 1959ஆம் ஆண்டளவில் டபிள்யூ. தஹாநாயக்கவின் காலத்தில் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டன. இதன்போது பாடசாலை நிர்வாகத்துடன் சில உடன்பாடுகளுக்கு வரவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது.
இதன்பிரகாம், அரசுடமையாக்கப்பட்ட இன ரீதியான பாடசாலைகளில் கல்விகற்ற மாணவர்களின் இன விகிதாசாரத்துக்கேற்ப புதிய மாணவர்களின் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற நிபந்தனை 1960ஆம் ஆண்டளவில் கொண்டுவரப்பட்டு, இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது.
முன்னேற்றமடைந்துள்ள பல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களை சேர்ப்பதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம். இந்தப் பின்னணியில்தால் முஸ்லிம்களுக்கான அரச பாடசாலைகளையும், தனியார் பாடசாலைகளையும் அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது என்ற பின்புலம் இருக்கிறது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் ஒரு பாடசாலையில் ஒன்றாக படித்தால், அவர்கள் மத்தியில் இன ஒற்றுமை வளர்ந்துவிடும் என்று நினைப்பது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. தனித்துவமான கலாசாரங்களை பேணுவதற்கான பின்புலம் பாடசாலையில் அமையப்பெறுவது மாத்திரம்தான் இனரீதியான முரண்பாடுகளுக்கு காரணம் எனும் கருத்தாடல்கள் அடிப்படையிலே பிழையானவை.
திருகோணமலையில் தமிழ் பாடசாலையொன்றில் ஆசிரியைகள் அபாயா அணிந்து செல்லமுடியாது என்ற குழப்பத்தை ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறது. பாடசாலைகளில் தங்களுடைய கலாசாரம் குறித்த விடயங்களில் ஒரு நெகிழ்வுப் போக்கோடு நடந்துகொள்ளாத நிர்வாகங்களின் மீது, தாக்கம் செலுத்தமுடியாத ஒரு கல்விமுறையின் கீழ்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்படுகிறோமா என்ற துர்ப்பாக்கிய நிலையையும் நாங்கள் பேசித்தான் ஆகவேண்டும்.
வெறுப்பு பேச்சுக்களை பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தகுதி, தராதரம் பராது தண்டிக்கவேண்டும். வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மதத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் கீழ் தண்டிக்க வேண்டிய ஒரு பின்புலத்தை உருவாக்குவதன் மூலம்தான் இப்படியான பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு காணமுடியும்.
சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழல் படிப்படியாக இல்லாமலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் செறிவாக வாழாத பிரதேசங்களில் அவர்களது அடையாளங்களை நிறுவமுடியாத பின்புலம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இனமுரண்பாடுகளை உருவாக்குவதற்கு எத்தனிக்கின்ற சக்திகளை அடையாளம் காண்பதில் யாருக்கும் பிரச்சினை இருக்கமுடியாது. நாட்டில் எத்தனை தீவிரவாத இயக்கங்கள் இயங்குகின்றன என்பது பற்றிய சகல விடயங்களும் உளவுத்துறைக்கு தெரியும். இப்படியான சூழலில், கண்டியில் நடைபெற்ற கலவரத்துக்காக ஒரு இயக்கத்தின் ஒரு தலைமையை மாத்திரம் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், எத்தனையோ பேர் வெளியில் இருக்கிறார்கள். பல தடவை சட்டத்தின் பிடியிலிருந்தவர்கள் தப்பித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவங்களின் பின்புலத்தில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய ஒரு சூழல் உருவாகவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் இறுக்கமாக இருக்கிறோம். சட்டம், ஒழுங்கு விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இறுக்கமான கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும் என்பதில் நாங்கள் விடாப்பிடியாக இருக்கிறோம்” என்றார்.
பாடசாலையின் பொன்விழாவை முன்னிட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, பீ. ஹரிசன், ஷந்தானி பண்டார, வட மத்திய மாகாண முதலமைச்சர் எம்.பி. ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான் மற்றும் சந்திம கமகே ஆகியோரும் கலந்து கொண்டர்.
(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்