வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?

🕔 April 22, 2018

ரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் வட கொரிய தலைவருக்கு என்ன லாபம் என்ற கேள்வியை முன் வைக்கிறார் ஆய்வாளர் அங்கித் பான்டா.

வட கொரியாவின் இந்த அறிவிப்பு தலைப்புச் செய்திகளாக வலம்வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஏவுகணைகள் திட்டங்களில் அந்நாட்டின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால், நாம் எதிர்ப்பார்ப்புகளை அது தணிக்கும்.

2006ஆம் ஆண்டு முதல் புன்கய்-ரி சோதனை தளத்திலிருந்து, 6 அணுஆயுத சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளது. அதனை மூடப்போவதாக தற்போது அறிவிப்பு வெளியானதற்கு காரணம் என்ன? அணு ஆயுதங்கள் வடிவமைப்பில் வட கொரியா வல்லமை பெற்றுவிட்டதாக கிம் கருதுகிறார்.

இந்த கூற்று உண்மையா என்று சரிபார்க்க முடியவில்லை என்றாலும் இது மிகைப்படுத்தலோ அல்லது நம்ப முடியாத ஒன்றோ அல்ல.

உதாரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளலாம். 1998ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளும் 6 அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளன. தற்போது அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் இவையும் முக்கியமானவையாக இருக்கின்றன.

அணுசக்தி ஆயுதங்கள் குறித்து பொதுத்தளத்தில் இருக்கும் தகவல்களை எட்டு இதைவிட ஆண்டுகள் அதிகம் பயன்படுத்தியுள்ள வட கொரியா தற்போது அதுவே போதுமானதாக நினைக்கலாம்.

“நகரத்தையே தகர்க்கும் அளவிற்கான” சக்தி

வட கொரியாவின் ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு ஆயுத சோதனைகள் – செப்டம்பர் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டன. இவை இரண்டுமே முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

2016ல் நடத்தப்பட்ட சோதனையானது, சிறிய, இடைநிலை, நடுத்தர மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என, எதிலும் வைத்து செலுத்தக் கூடிய தரப்படுத்தப்பட்ட, அளவில் சிறியதான அணுசக்தி சாதனத்தை வைத்து நடத்தப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்தது.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா, நாகசாகியில் வீசிய குண்டை காட்டிலும் இது இரண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகம் என்று கருதப்படுகிறது. இதுவே வட கொரியாவின் தேவைகளுக்கு போதுமானதாகும்.

சமீபத்தில் வட கொரியா நடத்திய சோதனை, சக்தி வாய்ந்த அணு வெடிப்புத் தாக்கத்தை உருவாக்குவதற்கான திறனை பெற்றுள்ளது என்பதை காட்டியது.

தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் வடிவமைப்பில் உண்மையிலேயே வட கொரியா கைதேர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் மற்றும் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை.

ஆனால், செப்டம்பர் 3, 2017ல் பதிவு செய்யப்பட்ட நில அதிர்வுத் தரவுகளின்படி, ஒரு “நகரத்தையே தகர்க்கும் அளவிற்கான” அணு ஆயுதத்தை வட கொரியா வைத்துள்ளது என்று சொல்லப் போதுமான ஆதாரங்களை உலகிற்கு அளித்தது என்று கூறப்படுகிறது.

கிம் மேற்கொண்ட சமீபத்திய பெய்ஜிங் பயணம், அவர் நாட்டை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தன்னம்பிக்கையோடு, சக்தியோடு இருப்பதையே காட்டுகிறது. அணுசக்தி சோதனைகளை நிறுத்தி கிம் வெளியிட்ட அறிவிப்பு, அவரது புது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

தடையை எளிமையாக தகர்த்துவிட முடியும்

இந்த அணு ஆயுதப் பரிசோதனைத் தடை எல்லாம் வரையறைக்கு உட்பட்டவையே.

புங்கி ரி அணு ஆயுத சோதனைத் தளத்தின் சோதனைச் சுரங்கங்களை இடிப்பது போன்ற செயல்களால் சோதனைத் தடை அறிவிப்பின் நம்பகத் தன்மையை வட கொரியா நிரூபித்திருக்கலாம். ஆனால், ஆனால், சோதனை தளம் “கலைக்கப்படும்” என்றுதான் வட கொரியா கூறியுள்ளது.

1999ல் ஏவுகணை சோதனைத் தடையை ஏற்றுக்கொண்டது வடகொரியா. ஆனால், 1994ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகள் தகர்ந்துபோனதை அடுத்து 2006 ஆண்டு இந்தத் தடையை வட கொரியா மீறியது குறிப்பிடத்தக்கது.அணுசக்தி சோதனையை நிறுத்துவதன் மூலம், “சக்தி வாய்ந்த சோஷியலிசப் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்” என்று கிம் ஜாங்-உன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இது முக்கியமான ஒன்று. இந்த இலக்கை அடைவதற்கு, வரவிருக்கும் உச்சிமாநாடுகளில், தன் மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகளில் இருந்து வட கொரியா நிவாரணம் பெற விரும்பும்.

உச்சிமாநாடு என்ற பரிசு

ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனை தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பானது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான உச்சிமாநாட்டுக்கு முன் வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்கும்போது அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைத் தடைகளை அறிவிக்காமல் ஏன் தற்போது இத்தடையை அறிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அமெரிக்க அதிபருடன் கிம் சந்திக்க உள்ளதே அவருக்கு ஒரு பரிசுதான்.

அணு ஆயுத சோதனை தளங்களை அழிப்பதால் ஏற்படும் இழப்பைவிட, டிரம்புடனான சந்திப்பில் இவருக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதுவரை கிம்மின் தாத்தாவோ அல்லது தந்தையோ இதனை செய்ய முடியவில்லை.

வட கொரியா பிழைத்திருப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் அணு ஆயுதங்களை விட்டொழிப்பதற்கான அறிகுறி ஏதும் கிம்மின் அறிவிப்பில் இல்லை. அந்த அறிவிப்பு வடகொரியாவை அணு ஆயுத சக்தியாக பிரகடனம் செய்வதைப் போல் உள்ளது.

வட கொரியாவின் இந்த அறிவிப்பை “ஒரு நல்ல முன்னேற்றம்” என்று டிரம்ப் பாராட்டி இருந்தாலும், கிம்மின் இறுதி நோக்கங்களை எவ்வளவு விரைவாக டிரம்ப் உணர்கிறாரோ, அவ்வளவு தூரம் அவருக்கு அது நல்லது.

நன்றி: பி.பி.சி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்