ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்
புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டமையினால், அமெரிக்காவுக்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“இலங்கைக்கான மீள் அதிகாரம் அளிக்கப்பட்ட அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. பிளஸ் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்து, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்புடையதாகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, முதல் முறையாக 03 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியை இலங்கைக்கு மீண்டும் வழங்கியமைக்காக நாங்கள் அமெரிக்காவிற்கு நன்றி கூறுகின்றோம். இந்த முன்னெடுப்பு உலகின் பெரிய வர்த்தக பங்காளர்களுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன் நின்றுவிடாது, எமது ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி அமெரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் அமெரிக்க நுகர்வோர்களுக்கும் உதவியளிக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மார்ச் 23ஆம் திகதி ஒம்னி செலவு சட்ட மூலத்தில் கையெழுத்திட்டபோது, பயன்பெறும் 120 நாடுகளுக்கான (2017 புதுப்பிக்கப்படாத) அமெரிக்காவின் ஜி.எஸ்.பி.பிளஸ் வசதியை வழங்க மீள் அதிகாரம் அளித்துள்ளார். அவர் வழங்கிய மீள் அதிகாரம் 120 வளர்முக நாடுகளின் சுமார் 5000 பொருட்களை, தீர்வையற்ற முறையில் அமெரிக்கா இறக்குமதி செய்ய வழிவகுத்துள்ளது.
அமெரிக்காதான் பல ஆண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதியை கொள்வனவு செய்யும் முன்னணி நாடாக இருக்கிறது. கடந்த ஆண்டிலும் முன்னணியில் இருந்தது. இலங்கையின் அமெரிக்காவிற்கான மொத்த ஏற்றுமதியானது அமெரிக்க டொலர் 2.9 பில்லியன் அடைந்து, தர அளவீட்டில் 03 பில்லியனை அண்மித்துள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை ஏற்றுமதிகளில் டொலர் 1.03 பில்லியன் அளவில் கொள்வனவு செய்த இரண்டாவது நாடாக பிரித்தானியாவும், மூன்றாவது நாடாக டொலர் 689 மில்லியன் ஏற்றுமதி கொள்வனவு செய்த நாடாகவும் இந்தியாவும் விளங்குகின்றது.
அமெரிக்காவுக்கானஅதிகூடிய ஏற்றுமதி பொருளாக ஆடைகள் இருகின்றன. இது வருடாந்த ஏற்றுமதியில் சுமார் 70 – 75 வீதமாகும். 2016ஆம் ஆண்டின் மொத்த அமெரிக்க – இலங்கை வர்த்தகம் (ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும்) அமெரிக்க டொலர் 3.3 பில்லியனாகும்.
புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி புதுப்பிக்கப்பட்ட திகதி 2018 ஏப்ரல் 22 திகதி ஆகையினால், அமெரிக்காவுக்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22 திகதிக்கு பின்னரே இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர்.
எவ்வாறாயினும், அமெரிக்க இறக்குமதியாளர்கள் ஜி.எஸ்.பி.பிளஸ் நடைமுறையில் இல்லாத காலத்தில் அதாவது, 2018 ஜனவரி 01இல் இருந்து 2018 ஏப்ரல் 22 வரை இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப்பெற உரித்துடையவராகின்றனர். இது அமெரிக்க ஜனாதிபதியின் பின் நோக்கிய புதுப்பித்தல் நடவடிக்கையினால் சாத்தியமாகியது என அமைச்சர் தெரிவித்தார்.