பெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார்

🕔 April 18, 2018

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கன்னத்தை தட்டியமைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்புக் கோருவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பின் முடிவில்ஆளுநர் எழுந்து சென்றுகொண்டிருக்கும்போது, ‘தி வீக்’ இதழின் பத்திரிகையாளரான லக்ஷ்மி சுப்ரமணியம், “பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் உங்களுக்குத் திருப்தி இருக்கிறதா?” என்று கேட்டார்.

அதற்கு எவ்வித பதிலையும் வழங்காதஆளுநர், லக்ஷ்மியின் கன்னத்தைத் தட்டி விட்டுச் சென்றார்.

இதனால் கோபமடைந்த லக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து கண்டனம் தெரிவித்தார். மேலும் ஊடகவியலாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்குக் கடிதங்களை அனுப்பின.

இந்த நிலையில் ஊடகவியலாளர் லக்ஷ்மிக்கு ஆளுநர் வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ஊடகவியலாளர் சந்திப்பின் முடிவில் நான் எழுந்து புறப்படும்போது நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். அந்தக் கேள்வி சிறப்பான கேள்வியாக எனக்குப்பட்டது. நீங்கள் கேட்ட கேள்வியைப் பாராட்டும்விதமாக, உங்களைப் பேத்தி போல கருதி கன்னத்தில் தட்டினேன். கடந்த 40 ஆண்டுகளாக நானும் இந்தத் தொழிலில் இருப்பதால், ஒரு பிரியத்திலும் ஊடகவியலாளராக உங்கள் செயலைப் பாராட்டும் விதத்திலும் அவ்வாறு செய்தேன்.

இந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் வருத்தமடைந்திருக்கிறீர்கள் என்பது உங்கள் மின்னஞ்சலில் இருந்து தெரிகிறது. இதனால் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவிப்பதோடு மன்னிப்பும் கேட்கிறேன். இதை ஏற்று பதில் மின்னஞ்சல் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருக்கின்றார்.

ஆளுநரின் இந்தக் கடிதத்திற்குப் பதிலளித்திருக்கும் லக்ஷ்மி சுப்பிரமணியன்; “நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் நடந்தது குறித்து வருத்தம் தெரிவித்து நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும், நான் கேட்ட கேள்வியைப் பாராட்டுவதற்காக நீங்கள் அப்படிச் செய்ததாக கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்