நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பிலிருந்து ஏன் விலகினோம்: ரகசியத்தை வெளியிட்டார் அமைச்சர் துமிந்த
அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரையும் காப்பாற்றவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றுஎஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானங்கள் சம்பந்தமாக எவராவது பொய்யான கருத்துக்களை வெளியிட்டால், தானும் கட்சியின் தலைவர்களும் மூடிய வாய்களை திறக்க நேரிடும் எனவும் அவர் கூறினார்.
விவசாய அமைச்சில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது கூறிய பொய்யான கருத்துக்களை மீண்டும் கூறிக்கொண்டு சிலர் நாடு முழுவதும் செல்கின்றனர்.
அவர்கள் இவ்வாறு தொடர்ந்தும் செயற்படுவார்களானால், உண்மையில் என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த நேரிடும்.
அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 பேரையும் காப்பாற்றவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 பேர் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த சிறிய அணியினர் அரசாங்கத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்குகு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. அரசாங்கம் சிறந்த யோசனைகளை கொண்டு வரும் போது, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கி என்னைத் தள்ளுதவ்றகு சிலர் முயற்சித்து வருகின்றனர். நானோ, அமைச்சர் மகிந்த அமரவீரவோ எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை.
என் மீது குற்றம் சுமத்தும் நபர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டவர்களாவர்” என்றார்.