அமெரிக்கா – ரஷ்யாவுக்கிடையில் போர் மூழும் அபாயம்; பொறுமை காக்குமாறு ஐ.நா. செயலாளர் வேண்டுகோள்

🕔 April 15, 2018

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க வேண்டுமென, ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குற்றேரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவின் டூமாபகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதன் பின்னணியில் சிரிய அரசாங்கமும் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த நிலையில், நேற்றைய தினம் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து, சிரியாவில் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

இந்த நிலையில் சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குற்றேரஸ் தெரிவிக்கையில்; “சிரியா விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமித்த கருத்து ஏற்படாதது கவலையளிக்கிறது. நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் சிரியா பிரச்சினையில் சுமூக உடன்பாட்டை எட்ட வேண்டும்.

இந்தப் பிரச்சினை வரம்பை தாண்டிவிடக்கூடாது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 05 நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு சிரியாவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்