போதிய அனுபவமின்றி பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தவறிழைத்து விட்டேன்: மன்னிப்பு கோரினார் ஸக்கர்பர்க்

🕔 April 11, 2018

பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திருடியமை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்ததோடு, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பும் கோரினார்.

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போலியான செய்திகளை பரப்பிவிட்டமை மற்றும் அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பவை உள்ளிட்ட கடினமான கேள்விகளை, மார்க் ஸக்கர்பர்க்கிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர்.

சுமார் 05 மணிநேரம் ஸக்கர்பர்க் விளக்கமளித்தார்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா

அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், டிரம்பின் பிரச்சார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது.

அந்த நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அலெக்ஸாண்டர் கோகன் என்ற ஆய்வாளர் உருவாக்கிக் கொடுத்த ஆப்ஸ் மூலமாக, 05 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திருடி, தேர்தலில் பயன்படுத்திக் கொண்டமை அம்பலமானது. இதனால் பேஸ்புக்கின் நம்பகத்தன்மை குறித்து பயன்பாட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.

நாடாளுமன்றத்தில் விளக்கம்

இதையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு  நேற்று செவ்வாய்கிழமை வரவழைக்கப்பட்டார். அவரிம் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (செனட் உறுப்பினர்கள்) பேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். ஒவ்வொரு செனட் உறுப்பினருக்கும் 05 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த விசாரணையின் போது, மார்க் ஸக்கர்பர்கிடம் பல கடினமான கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர். 2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா, அவர்களுக்கு தகவல்கள் பரிமாறப்பட்டனவா, போலியான செய்திகள் பரப்பிவிடப்பட்டனவா என்பது குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜான் துனே ஜுகர்பெர்க்கிடம் கேள்வியெழுப்புகையில்; “உங்கள் விருப்பத்துடன் அனைத்து விதமான தகவல்களும் பரிமாறப்பட்டதா” என்று கேட்டார். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் ஸக்கர்பர்க் பதில் அளித்தார்.

ஸக்கரபர்க் மன்னிப்பு

அதன்பின் ஸக்கர்பர்க் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்;

“பேஸ்புக் என்பது முற்போக்கு சிந்தனை கொண்ட, நேர்மறையான கொள்கைகள் கொண்ட நிறுவனமாகும். உலகில் உள்ள மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே பேஸ்புக் ஆகும். ஆனால், அதில் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவில்லை.

தேர்தலில் தலையீடு, போலியான செய்திகள் வெளியிடுதல் போன்ற தவறுகள் நடந்துவிட்டன. இது மிகப்பெரிய தவறாகும், இந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதற்கு மன்னிப்பும் கோருகிறேன்.

இனிவரும் காலங்களில் பேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், தவறான தகவல்களை பரப்புவதையும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மக்களை ஒன்றாக இணைப்பது மட்டுமல்லாமல், அவர்களை பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்கவும் முயற்சிக்கப்படும்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தவறான வழிகளில் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த விவரங்கள் அனைத்தையும் அழிக்க கோரியுள்ளோம்.

போதிய அனுபவம் இல்லாமல் பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தவறுகளை செய்திருக்கிறேன். தவறான நபர்களை நம்பினேன்; தவறானவர்களை பணிக்கு அமர்த்தினேன்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை நம்பியிருந்திருக்கக் கூடாது. அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டேன். இது முகநூல், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, அலெக்ஸாண்டர் கோகன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே நடந்த நம்பிக்கை மீறலாகும்.

அதுமட்டுமன்றி, முகநூல் நிறுவனத்துக்கும், பயன்பாட்டாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த நம்பிக்கை மீறலாகவும் இது உள்ளது. எனவே, முகநூல் பக்கத்தில் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் வகையில், பல மாற்றங்கள் செய்யப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்