யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு
– பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணம் கொட்டடி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து, இன்று சனிக்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டன.
கொட்டடி 03ஆம் ஒழுங்கை முத்தம்மாள் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பூராஜா (வயது 38) என்பவர் யாழ் கொட்டடியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மதுபோதையில் வந்த நிலையில், வாய்க்காலுக்குள் விழுந்தமையினால், மரணம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
இதேவேளை, யாழ். கேணியடி வைரவர் கோவிலுக்கு பின்புறமாக அமைந்துள்ள வீடொன்றிலிருந்து, 75 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் மண்ணெண்ணெய் ஊற்றி தன்னைத் தானே எரித்து கொண்டுள்ளார் என்றும், மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் – மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியாக வாழ்ந்து வந்துள்ளார் எனவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
மேற்படி இரு சடலங்களும் – பிரேத பரிசோதனைக்களுக்காக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.