பால்மா விலையை 80 ரூபாவால் அதிகரிக்க, அரசாங்கம் அனுமதி
பால்மா பக்கட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் பால்மாவுக்கான விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை, பால்மா உற்பத்தியாளர்களுக்கு – வாழ்க்கைச் செலவை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழு வழங்கியுள்ளது.
இதேவேளை, 400 கிராம் பால்மாவுக்கான விலை 35 ரூபாவால் அதிகரிக்கும் என்று, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைத்துள்ள போதும், அது தொடர்பில் இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என்றும், நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையினை அடுத்தே, மேற்படி விலையேற்றத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.