ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம்
🕔 March 24, 2018
“ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்குச் செய்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமானதாகும்” என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால், அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” எனவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மேற்கண்ட விடயங்களை அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
“நாங்கள் கடந்த 03 வாரங்களாக சிறிகொத்தாவில் ஐ.தே.க. முக்கியஸ்தர்களை சந்திந்து பேசிவந்த விவகாரங்களையும் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகவும் கடினமான விடயம் என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயமாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றியீட்டிய சபைகளில் எங்களுக்கு தவிசாளர் பதவி தரவேண்டிய நிலையில், எங்களைப் புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் கூட்டுச் சேர்வதாக இருந்தால் அதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் தகுந்த பதிலடியை கொடுப்பதற்கும் தயங்கமாட்டோம்.
இயலுமானவரை இந்த ஆட்சியில் ஒற்றுமையுடன் பயணிப்பது என்ற நோக்கத்தில் இருந்தாலும், எங்களை பலவீனப்படுத்திக்கொண்டு பயணிக்க முடியாது.
(மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு)