ஐ.தே.கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது; அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 March 24, 2018

“ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுக்குச் செய்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமானதாகும்” என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால், அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, மேற்கண்ட விடயங்களை அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாங்கள் கடந்த 03 வாரங்களாக சிறிகொத்தாவில் ஐ.தே.க. முக்கியஸ்தர்களை சந்திந்து பேசிவந்த விவகாரங்களையும் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகவும் கடினமான விடயம் என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். ஆனால் எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்‌றியீட்டிய சபைகளில் எங்களுக்கு தவிசாளர் பதவி தரவேண்டிய நிலையில், எங்களைப் புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் கூட்டுச் சேர்வதாக இருந்தால் அதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் தகுந்த பதிலடியை கொடுப்பதற்கும் தயங்கமாட்டோம்.

இயலுமானவரை இந்த ஆட்சியில் ஒற்றுமையுடன் பயணிப்பது என்ற நோக்கத்தில் இருந்தாலும், எங்களை பலவீனப்படுத்திக்கொண்டு பயணிக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் இருக்கத்தக்க நிலையில், தேர்தலில் இணைந்து போட்டியிடும் நேசக் கட்சிகளுக்கும் ஒரு செயலாளரை சிறிகொத்தாவில் நியமிக்க வேண்டுமென நாங்கள் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கிறோம். அப்படியில்லாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது எங்களது சாத்தியமாகாது.
 
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்‌கிரஸ் தனித்துதான் போட்டியிடவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பல இடங்களில் தனித்துப்போட்டியிட்டு கட்சியின் தளத்தை பாதுகாத்திருக்கிறோம். சில இடங்களில் விட்டுக்கொடுக்காமல் இருந்ததன் மூலம் அங்கு குறிப்பிடத்தக்களவு உறுப்பினர்களை வென்றிருக்கிறோம்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு தகுதிபெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு வாரங்களாக பல கட்சிகளுடன் இதுதொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இறுதி முடிவெடுக்க இன்னும் ஓரிரு தினங்கள் செல்லும்.
 
நாங்கள் ஆட்சியமைப்பதற்காக எல்லா இடங்களிலும் விதம்விதமான விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டியிருக்கிறது. ஆட்சியை பங்கிடுதல், தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை பங்கிடுதல், மாற்றுக்கட்சி உறுப்பினர்களை சேர்த்துக்கொள்தல் என்று பல்வேறு விதமான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
 
வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா ஆகியோருடன் நடத்தியிருந்தோம். அதன் இறுதி முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
 
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவுடனும் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறோம். ஜனாதிபதி நாடுதிரும்பியவுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர்தான் அதன் இறுதி தீர்மானங்கள் எட்டப்படும். 
 
இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட தலைமைகள் ஆட்சியமைப்பது தொடர்பில் எங்களை நாடிவந்து தீவிரமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். தவிசாளர் பதவி தருகிறோம் என்றும் பிரதி தவிசாளர் பதவி தருவோம் என்றும் நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர். இதற்கான முடிவுகளை நாங்கள் விரைவில் அறிவிப்போம்” என்றார்.

(மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்