ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேர் ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன் உள்ளிட்ட வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்துள்ள நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான கையெழுத்துக்கள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.