நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை, மே 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரின் சகோதரர் ஆராய்ச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோரை மே மாதம் 25ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினரும் அவரின் சகோதரரும் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கு, இன்று நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரின் சகோதரருக்கும் நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
மேற்படி இருவரும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனும் நிபந்தனை, அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து இவர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருக்கவில்லை என, இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே, ஐ.ம.சு.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவையும் அவரின் சகோதரரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.