அவன் ஒரு குடிகாரன்; சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம்

🕔 March 16, 2018

“ஞானசார தேரர் ஒரு குடிகாரன், ஞானசாரவை நான் பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் சில கபட நரிகள், இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர்” என படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜருமான சட்டத்தரணி அஜித் பிரசன்ன விசனம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கண்டி திகனவில் கொல்லப்பட்ட சிங்கள சாரதியின் இறுதிக் கிரியைகளுக்கு ஞானாசார தேரரும் சென்றிருந்தார். இதனை நாம் கண்டோம். அதேவேளை தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு சென்றும், வேறு இடங்களுக்கு சென்றும் சத்தமிட்டு மிரட்டியுள்ளார்.

அதேபோல் மக்களை தூண்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனாலேயே மக்கள் குழப்பமடைந்து தாக்குதல் நடத்தி, சொத்துகளுக்கு தீ வைத்தனர்.

ஆனால், கலகொட அத்தே ஞரனாசார தேரரை கைது செய்யவில்லை. ஏன் அது? ஞானாசார தேரர் என்பவர் சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகிய அமைச்சர்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை.

அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளை.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்களின் வாக்குகளை கிடைக்காது செய்வதற்காக, ரணில் பயன்படுத்தும் செல்லப்பிள்ளைதான் ஞானாசார தேரர்.

கலகொட அத்தே ஞானாசார தேரர் – குடிபோதையில் வாகனத்தை ஓட்டி மற்றுமொரு வாகனத்தை மோதிய ஒருவர். இந்தக் குற்றத்தை அவர் கொழும்பு போக்குவரத்து நீதிமன்றில் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.

இதனால் நான் அவரை பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவரானால் அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும்.

எந்த அடிப்படையில் அவர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி மற்றுமொரு வாகனத்துடன் மோத முடியும்? நீதிமன்றக் கூண்டில் ஏறி தனது தவறை ஏற்றுக்கொண்டு அதற்காக தண்டனையும் பெற்றுக்கொண்ட ஒரு நபர் இவ்வாறு பௌத்த பிக்குவாக இருக்க முடியும்? அதனை எவ்வாறு அனுமதிப்பது?

ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் எமது சில கபட நரிகள், இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர்” என்றார்.

இதேவேளை தனது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அஜித் பிரசன்ன பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஒருவர் எவ்வாறு சட்டத் தரணியாக கடமையாற்ற முடியும் எனவும், பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அஜித் பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்