ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில்
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காத்தான்குடியில் நேற்று மாலை, அவரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையின் போது, மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின்போது, 05 மாத கர்ப்பிணி பெண் உட்பட 13 பேர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இவர்களில் 06 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம், முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்ட செய்திகள் வெளியானமையினைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவின் சொந்த ஊரான காத்தான்குடியில் அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி, மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டதோடு, மாற்றுக் கட்சிக்காரர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் மீதும் பட்டாசுகளைக் கொழுத்தி வீசியதாக சம்பவங்களை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் மீதும், ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத் தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாகவும், இவர்களில் பெண்களும் அடங்குவதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில், காயமடைந்தவர்களில் ஆறுபேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.