பிரதமரை விமர்சித்து விட்டாராம்; ஹரீஸுக்கு எதிராக, கட்சிக்குள் ஒழுக்காற்று முயற்சி: நடந்தது என்ன?

🕔 March 12, 2018
– றிஸ்கான் முஹம்மட் –
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் விடுத்த கோரிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இனவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக, பிரதியமைச்சர் ஹரீஸ் உரையாற்றியமைக்காகவே, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கட்சி தலைமையகமான தாறுஸ்ஸலாமில் இடம்பெற்றது. இதன்போதே, ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட சிலர், கோரிக்கை விடுத்தனர்.
மேற்படி உயர்பீடக் கூட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான சமகால இனவாத தாக்குதல் சம்பங்கள் மற்றும் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது, பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமருக்கு எதிராக பேசியமைக்கு எதிராக, கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் சில முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் நடந்தபோதிலும் பிரதமரையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும். அரசாங்கத்தை நாங்கள் குற்றம் சாட்ட முடியாது. என்ன விடயம் நடந்தாலும் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற தொனியில் பேசிய இவர்கள் பிரதமருக்கு எதிராக பேசுவதற்கு பிரதியமைச்சர் ஹரீசுக்கு அனுமதி அளித்தது யார்? எனவும் கேள்வியெழுப்பினர்.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பட்டும் படாமலும் சில விடயங்களை பேசினார். ஆனாலும், உயர்பீட உறுப்பினர்களுள் பெரும்பான்மையானோர் ஒவ்வொருவராக எழுந்து, பிரதியமைச்சர் ஹரீசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிராகப் பேசினர்.
உயர்பீட உறுப்பினர்கள் பலர் பேசுகையில்; நாட்டில் முஸ்லிம் சமூகம் இருக்கின்ற நிலைமை தெரியாமல் பேசுகின்றீர்கள், முஸ்லிம் சமூகம் பெரும் ஆபத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற இன வன்முறைச் சம்பவங்களின்போது அரசாங்கம் உரிய நேரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தவறியதனால்தான் இப் பெரும் கொடூரச் சம்வங்கள் நடந்துள்ளதாக முஸ்லிம் சமூகம் தீர்மானித்துள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீதும் பிரதர் மீதும் முஸ்லிம் சமூகம் கடும் அதிருப்தியில் இருக்கின்றது.
பிரதியமைச்சர் ஹரீஸ் – அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற இனவாத தாக்குதல் சம்பவங்களின்போது களத்திருந்து செயற்பட்டவர். அந்த வகையில், அம்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு எமது சமூகத்தின் அதிருப்தியை  நாடாளுமன்றத்தில் ஹரீஸ் பேசியிருக்கின்றார். அத்தோடு இச் சமூகத்தின் அவல நிலையையும் விரிவாக தெளிவுபடுத்தி இருந்தார்.
குறித்த இனவாத சம்பவங்களின்போது, அவர் களத்தில் நின்று செயற்பட்டதோடு நாடாளுமன்றத்திலும் அது தொடர்பில் உணர்வுபூர்வமாக பேசியதனால் சமூகம் அவரை, தமக்காக குரல்கொடுக்கின்ற ஒருவர் என்று அடையாளம் கண்டிருக்கிறது. அதற்காக அவரை எல்லா மூலை முடுக்குகளிலும் பாராட்டுகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலைமையில் கட்சி இவரின் உரையை அனுமதிப்பதை விட்டு விட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டால் கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவும் வீழ்ச்சியும் ஏற்படும் என்றனர்.
எனவே, அவர் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கின்ற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று அவ் உயர் பீட கூட்டத்தில் கலந்து கொண்டோரில் பெரும்பான்மையினர் எழுந்து நின்று கட்சித் தலைவரை வற்புறுத்தினர்.
இவ்வாறு பிரதியமைச்சருக்கு ஆதரவாக கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பேசியமையினால் கட்சித் தலைவரும் ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க முயற்சித்த கட்சியின் செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர் சிலரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் பிரதியமைச்சர் ஹரீசுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேசியவர்கள் களத்திற்குச் செல்லாததனால் மக்களுடைய உணர்வை புரியாமல் இவ்வாறு பேசுகின்றார்கள் என சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். பிரதியமைச்சர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ஒரு குறையுமில்லை. இதற்காக அவர் மீது யாரும் பொறாமைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.  எனவே தலைவர் உடனடியாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் விடயத்தை கைவிட வேண்டும் என்றும், உயர்பீட உறுப்பினர்கள் கோரினர்.
பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் பிரதியமைச்சருக்கு சார்பாக நியாயமாக பேசியதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் ஹரீஸின் – குறித்த நாடாளுமன்ற உரையினால் பிரதமர் கடும் குழப்பத்திற்குள்ளாகியமை தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் தொடர்புகொண்டு பேசியதாகத் தெரியவருகிறது. அதனால், பிரதமரை திருப்திப்படுத்துவதற்காகவே குறித்த ஒழுக்காற்று முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்