கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு
கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றிய தகவல்களை, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
அதேவேளை, கண்டியில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விபரங்கள் தவறானவை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரியப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் கவுன்சில் உப தலைவர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே, இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிணங்க, கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து, முஸ்லிம் கவுன்சில் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள விபரங்கள் வருமாறு;
- மரணம் – 01
- காயம்பட்டோர் – 12
- முழுமையாக சேதமடைந்த வீடுகள் – 62
- பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் – 79
- தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள் – 17
- முழுமையாக சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் – 91
- பகுதியளவில் சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் – 22
- சேதமாக்கப்பட்ட வாகனங்கள் – 60
- இடம்பெயந்த குடும்பங்கள் – 300
இந்த விபரங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிவரை பெற்றுக் கொள்ளப்பட்டவை என்றும், இவற்றினை கள உத்தியோகத்தர்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும், பொலிஸ் பேச்சாளருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.