முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

🕔 March 6, 2018
– அகமட் எஸ். முகைடீன் –

திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வு நடைபெறும்போது அதனைப் புறக்கணிக்கும் வகையில் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட திகன பிரதேசத்துக்குச் சென்று, அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இந்த புறக்கணிப்பு நடவக்கைக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார்.

அதற்கமைவாக பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், ஏ.ஆர். இஸ்ஹாக், இம்ரான் மஃரூப், எம்.எஸ். தௌபீக்மற்றும் முஜிபுர் ரகுமான் ஆகியோர் பிரதியமைச்சர் ஹரீசுடன் இணைந்து, முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்குமாறு கோசமிட்டு இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்களுடன்அமைச்சர் றிசாத் பாதியுதீன் பின்னர் இணைந்து கொண்டார்.

இவ்வெதிர்ப்பு நடவடிக்கையின்போது; ‘முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லை’, ‘முஸ்லிம் சமூகம் அழிந்துகொண்டிருக்கிறது உடனடியாக பாதுகாப்பை தா’, ‘மக்களை பாதுகாக்கவும்’ என, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதையடுத்து சபை நடைவடிக்கைகள் சீர்குலைந்தது.

இதன்போது தினேஸ் குணவர்தன குறுக்கிட்டு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் என கூறினார். அதைத் தொடர்ந்து விமல் வீரவன்ச இது சம்பந்தமாக பேசினார். அத்தோடு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல ஏற்கனவே இது சம்பந்தமாக நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசரமாக அமைச்சரவை கூடி இது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இருந்தபோதிலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் ‘இதிலிருந்து விலகமாட்டோம், எங்களுடைய சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது, பாதுகாப்பை தருவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது’ என்று மிக காட்டமான குரலில் கூறினர்.

இதையடுத்து சபைக்கு தலைமை தாங்கிய செல்வம் அடைக்கலநாதன், சபையை விட்டு மிக அவசரமாக சபாநாயகர் கரு ஜயசூரியவை நோக்கி விரைந்தார், கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்; சபை நடவடிக்கைகளை சீர் குலைக்காதீர்கள் எனக் கேட்டதோடு, இது சம்பந்தமாக ஜனாதிபதி அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி தற்போது அது சம்பந்தமான விவாதங்கள் நடைபெறுவதாகவும் கூறினார். எனவே, குறித்த பிரச்சினை தொடர்பில் பேசி தீர்க்கலாம் எனத் தெரிவித்து, உறுப்பினர்களுடைய ஆசனத்திற்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் உறுப்பினர்கள் அவருடைய வேண்டுகோளையும் நிராகரித்தனர். ‘எங்களுடைய சமூகத்திற்கு பாதுகாப்பை தாருங்கள்’ என்று மீண்டும் கோசமெழுப்பினர். இதைத் தொடர்ந்து வெளியிலிருந்த சிரேஷ்ட அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாகமகே, காமினி ஜெயவிக்ரம போன்ற பலர் பிரதமரின் அலுவலகத்திற்குச் சென்று பிரதமரை உடனே அழைத்து வந்தனர்.

பிரதமர் வருகை தந்த பின்னர், நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்குரிய பாதுகாப்பை பிரதமர் என்ற அடிப்படையில் உறுதிப்படுத்துவதாக கூறியதோடு, குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை பிரதமர் எடுத்த நடவடிக்கைகளையும் விபரித்துக் கூறினார். தற்போது அவசர காலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளை கைது செய்வதாகவும், அதே நேரம் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் சபையில் உறுதியளித்திருந்தார்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்; பிரதமரின் அம்பாறை விஜயத்தின்போது திகன பிரதேசத்தில் பதட்ட நிலை காணப்படுவதாகவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டதை சுட்டிக்காட்டி – அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியமையினால் இப்பெரும் விபரீதம் நடைபெற்றுள்ளதாக பிரதமரிடம் தெரிவித்தார். இது மிகப் பெரிய ஏமாற்றத்தை எங்களுக்கு தந்திருக்கின்றது என்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் கூறினார். இதன்போது இது சம்பந்தமாக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக கூறி, ஆசனத்தில் பிரதமர் அமர்ந்தார்.

ஆனால் தொடர்ந்தும் நாடாமன்ற உறுப்பினர்கள் கோசமிட்டவாறு இருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் ஏனைய சிரேஷ்ட அமைச்சர்களான பௌசி போன்றவர்கள் தற்காலிகமாக இவ்வெதிர்ப்பு நடவடிக்கையினை கைவிட்டு, பிரதமருடன் மீண்டும் விரிவாக பேசி தீர்வு காண்போம் எனக்கூறி இவ் எதிர்ப்பு நடவடிக்கையினை தற்காலிகமாக கைவிடுமாறு கோரினர்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற எதிர்ப்பு நடைவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்