வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர்

🕔 March 6, 2018

வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களே தெல்தெனிய மற்றும் திகன உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும்,  பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கூட தப்பிக்கவில்லை.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்திலும் அண்மைக்காலங்களில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன.

கண்டி சம்பவத்தில் முஸ்லிம் இளைஞரொருவர் நேற்று தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இவை முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விடயம் தெளிவாகியுள்ளது.

இது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது சிங்கள நாடு என்ற வகையில் சிங்களவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அதேவேளை இலங்கையில் ஏனைய மதத்தவர்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் மத உரிமை உள்ளது.

எனினும் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு கவலை தெரிவிக்கின்றேன்.

பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து. ஒவ்வொரு பொலிஸாரும் மிகவும் பொறுப்புடனேயே தமது கடமைகளை முன்னெடுத்திருந்தார்கள்.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களாலேயே இச்சம்பவங்கள்  முன்னெடுக்கப்பட்டன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்