அம்பாறை மாவட்டத்தில் 30 வீதம் வரையில், நெல் விளைச்சல் வீழ்ச்சி: மாவட்ட விவசாயப் பணிப்பாளர்

🕔 February 16, 2018

மப்றூக் –

ம்பாறை மாவட்டத்தில் தற்போதைய பெரும்போக நெல் விளைச்சலில் 20 தொடக்கம் 30 வீதம் வரையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அந்த மாவட்டத்தின் விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

இம்முறை பெரும் போகத்தின் போது, அம்பாறை மாவட்டத்தில் 04 லட்சத்து 23ஆயிரத்து 200 மெட்றிக்தொன் நெல் விளைச்சலை தாம் எதிர்பார்திருந்த போதும், 03 லட்சத்து 42ஆயிரம் மெட்றிக் தொன் விளைச்சலினையே பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்,

இம்முறை ஏற்பட்ட வரட்சி மற்றும் உரத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், விளைச்சல் குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இம்முறை பெரும் போகத்தில் அம்பாறை மாவட்டம் முழுவதும் 86ஆயிரத்து 786 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படுமென தாம் திட்டமிட்டிருந்த போதும்,  88ஆயிரத்து 16 ஹெக்டயர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்யப்பட்டதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கலீஸ் கூறினார்.

இதேவேளை, தற்போது நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், ஏக்கர் ஒன்றுக்கு 90 தொடக்கம் 95 புசல் வரையில், விளைச்சல் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த பெரும் போகத்தின் போது, ஏக்கரொன்றுக்கு 120 தொடக்கம் 130 புசல் நெல் வரையில் விளைச்சலாகப் பெற்றதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்