அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்

🕔 February 10, 2018

 – மப்றூக் –

க்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், அந்தக் கட்சிகளால் ஒரு வட்டாரத்தைக் கூட, வெற்றி பெற முடியாமல் போயுள்ளமையானது உள்ளுர் அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வட்டாரத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட சிராஜ் மஷ்ஹுர் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும், அங்கும் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

பட்டினப்பள்ளி வட்டாரத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இளைய புதல்வர் டில்ஷாத் அஹமட் போட்டியிட்டிருந்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, தனது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் தன்னுடைய இரு புதல்வர்களையும் களமிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று மாநகர சபையை, கடந்த முறையும் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

எது எவ்வாறாயினும், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் – கடுமையான வீழ்ச்சியினைச் சந்தித்துள்ளது.

அக்கரைப்பற்றில் மு.காங்கிரசை – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையேற்று வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாஉல்லாவுடன் கடந்த காலங்களில் இணைந்திருந்த தவம், பின்னர் மு.காங்கிரஸில் இணைந்து கொண்டார். இந்த நிலையில், மு.காங்கிரசின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட பலரையும் கட்சிக்குள் வெட்டி வீழ்த்திக் கொண்டு தவம் முன்னேறியிருந்தார்.

இந்தப் பின்னணியில், தவத்துடன் முரண்பட்டுக் கொண்டு, முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பல மூத்த பிரமுகர்கள், அந்தக் கட்சியிலிருந்து இந்தத் தேர்தல் காலத்தில் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் எந்தவொரு வட்டாரத்தினையும் கைப்பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்