ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம்

🕔 August 19, 2015

Hakeem - 098க்கியமக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை நெறிப்படுத்த முன்வந்தமைதான் மூலகாரணம் என்று, தான் கருதுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்பொழுதே, அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

“கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, மீண்டும் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நான், ஏனைய மாவட்டங்களுடன் இந்தமாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளிலும் முழு மூச்சாக ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளேன்.

என்னுடன் கண்டிமாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஏனைய, உறுப்பினர்களுடன் இணைந்து, நாம் ஒரு பலமான அணியாக இயங்க இருக்கின்றோம்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. இந்த நிலையானது, அக் கட்சியினருக்கு மிகவும் கவலையளிக்கும்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் – எங்களைப் போன்ற ஏனைய கட்சியினர் இணைந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளரை, இந் நாட்டின் மிக உயரிய ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவு செய்தோம். அதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகளை முழுமையாக கையாள இடமளித்திருக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ – அந்தக் கட்சியை நெறிப்படுத்த முன்வந்தமைதான் மூலகாரணமென, நான் கருதுகின்றேன்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மீண்டும் தமதுகட்சியை வேறு தலையீடுகளின்றி சரிவர நெறிப்படுத்தி, நாம் எதிர்பார்க்கின்ற பலமான தேசிய அரசாங்கத்தினூடாக, யுத்தத்தின் பின்னரான சூழலில் முடியாது போன, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டினை  சுபீட்சத்தை நோக்கியும், ஐக்கியத்தை நோக்கியும் – முன்கொண்டு செல்வாரென திடமாக நம்புகின்றோம்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசாங்கத்தை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வாரென நாங்கள் நம்புகின்றோம்.

இருபெரும் கட்சிகளும் கூட்டாக, குறைந்த பட்சம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்ற அவரின் தரப்பைச் சேர்ந்தவர்களையும் இணைத்து, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த சேவையாற்றுவதற்கும், இன்றைய  சூழலை மேலும் பயனுள்ளதாக்கி, நாட்டில் மனித உரிமைகள் மீறப்படாத நல்லாட்சிக்கு வழிகோலுவோம் எனவும் உறுதி பூணுவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்