மு.கா. தொன்டர்களை சாய்ந்தமருதில் பலிக்கடாக்களாக்கும் ஹக்கீமின் தந்திரம்; சுயநலத் தலைவனை அறிவதற்கான தருணம்

🕔 February 2, 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –

சாய்ந்தமருதில் மு.காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ‘எழுச்சி மாநாடு’ எனும் பெயரில் நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த கூட்டமானது சாய்ந்தமருது மக்களை வேண்டு மென்றே வம்புக்கு இழுக்கும் செயற்பாடாகும்.

அமைச்சர் ஹக்கீமை சாய்ந்தமருதினுள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று, சாய்ந்தமருது மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது. சாய்ந்தமருதுக்கு அமைச்சர் ஹக்கீம் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டாலே, அந்த மக்கள் வீதிகளில் கம்பு தடியுடன் வலம் வருகின்றனர். இந் நிலையில் அங்கு பிரசாரக் கூட்டமொன்றினை நடத்துவதென்பது, அந்த ஊர் மக்களை வேண்டுமென்றே கோபப்படுத்தி வம்புக்கு இழுக்கும் செயல் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை.

அமைச்சர் ஹக்கீம் – சாய்ந்தமருதில் ஏன் எழுச்சி மாநாடு நடத்த வேண்டும்? சாய்ந்தமருதில் உள்ள ஆதரவாளர்களை கொண்டு மாத்திரம், பிரசாரக் கூட்டமொன்றை நடத்தினால், அங்கு மு.காங்கிரஸ் பலத்த அவமானத்தை சந்திக்க நேரிடும். அப்படி நடந்தால், அந்த நிகழ்வு இத் தேர்தலில் ஏனைய இடங்களிலும் அதிக தாக்கம் செலுத்தி விடும். எனவேதான் வெளியூர் மக்களையும்  சாய்ந்தமருதுக்கு அழைத்தால், கூட்டத்தில் பார்வையாளர்கள் இல்லையே என்ற அவமானத்தை தவிர்த்துக் கொள்ள முடியும்.

இங்கு இன்னுமொரு விடயமுமுள்ளது. அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு தனித்துச் செல்லும் போது, அந்த மக்களின் எதிர்ப்பை அவராலும், சாய்ந்தமருதிலுள்ள மு.கா. தொண்டர்களாலும் சமாளிக்க முடியாது. எனவேதான் ஏனைய பிரதேசங்களையும் சேர்ந்த தொண்டர்களையும் அதிகளவில் அழைத்துச் சென்றால், அவர்கள் புதினம் பார்த்து முடிப்பதற்குள், அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

மு.கா. தலைவரை தலைவரை காப்பாற்ற போராளிகள் எனப்படும் தொண்டர்கள்தான் தலை கொடுப்பார்கள். இங்கு பிரச்சினைப்பட்டு அடிபடப் போகின்றவர்கள் அப்பாவி தொண்டர்கள்தான். இந்த பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றவர்கள் நீதிமன்றம், வழக்கு என்று அலைய நேரிடும். 

சாய்ந்தமருதில் ஒரு குழப்பகரமான நிலை நிலவுகிறது என நன்கு அறிந்து கொண்டு, அங்கு முஸ்லிம் காங்கிரசின் தொண்டர்களை அழைத்துச் செல்வதைப் போன்ற ஓர் உச்ச சுய நலம், மு.கா. தலைவரைத் தவிர – வேறு யாருக்கும் இருக்காது. சில வாரங்களுக்கு முன்னர், அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருது பிரதான வீதி ஊடாகக் கூட பயணிக்க அஞ்சி, சொறிக்கல்முனை ஊடாக மருதமுனை சென்றிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

தனது பாதுக்காப்புக்காக இத்தனை கரிசனை எடுத்துக் கொண்ட அமைச்சர் ஹக்கீம், இப்போது அந்த ஊருக்குள் தனது வெளியூர் ஆதரவாளர்களுடன் நுழையப் போகிறார். இதனை விட சுயநலம் இருக்க முடியுமா? தான் செல்ல அஞ்சிய இடத்துக்கு, வெளியூர் மக்களை அழைத்து செல்வதுதான், ஒரு தலைவரின் வழி காட்டலா? தங்களது தலைவர் குறித்து போராளிகள் அறிந்துகொள்வதற்கான சரியான தருணம் இதுவேயாகும்.

இருந்தாலும் இங்கு ஒரு உண்மையையும் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு தேவையான நேரம் சென்று வர, சாய்ந்தமருது மக்கள் அனுமதித்திருக்க வேண்டும். அது ஒருவரின் உரிமையாகும் . இந்த உரிமையை யாரும் தடை செய்வது சட்டப்படி குற்றமாகும். மு.கா. த பக்க நியாயத்தை கூறும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்கப்பட்டிருந்தால், கூட்டத்தில் கலந்து கொள்ள ஆட்களே இல்லாமல், அவர் அவமானப்பட்டு சென்றிருப்பார். இப்படி ஓர் எழுச்சி மாநாடொன்றை நடத்தும் சிந்தனை கூட அவருக்கு வந்திருக்காது.

சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை பத்தோடு பதினொன்றாக பார்க்க முடியாது. அது ஏனைய ஊர்களும் முன் மாதிரியாக கொள்ளத்தக்க, பள்ளிவாசல் தலைமையால் வழி நடத்தப்படுகின்ற ஒரு போராட்டமாகும். பள்ளிவாசலொன்று போராட்டத்தை முன்னின்று நடாத்துகின்ற போது, அதற்கென்று தனித்துவமான பண்புகள் இருந்தாக வேண்டும். அதில் வன முறைகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும். சாய்ந்தமருதில் வன்முறையற்ற போராட்ட சிந்தனை ஆரம்பத்தில் தவிர்க்கப்பட்டிருந்தால், இதனைப் போன்ற – ஒரு முன் மாதிரியான போராட்டம் வேறு எங்கும் நடக்கவில்லை என்று கூறியிருக்க முடியும்.

எவ்வாறிருந்தாலும் இதுவரை நடைபெற்ற  வன்முறைகளுக்கு பள்ளிவாயல் தலைமைகளை குறை கூற முடியாது. குறித்த வன்முறைகளில் ஈடுபட்டோரே அதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும். ஆனால், அவர்களை சரியான பாதையில் வழிநடத்தவில்லை என்பதை – பள்ளிவாசல் நிருவாகம் மீதான குற்றச்சாட்டாக முன்வைக்கலாம்.

ஆனால் மக்களின் உணர்ச்சிகளை இலகுவில் கட்டுப்படுத்தவும் முடியாது. மு.கா.வின் எழுச்சி மாநாடு நடக்கவிருக்கின்ற நாளைய தினம் எந்த விதமான பிரச்சினைகளும் இடம்பெறாத வகையில் பள்ளிவாயல் தலைமைகள் மிக நேர்த்தியான வழி காட்டல்களை மேற்கொள்ள வேண்டும். எதிர்ப்பை காட்டுவதென்றால் ஆயிரம் வழிகளை கையாளலாம். அமைச்சர் ஹக்கீமுக்கு வாக்குகள் மூலம் அடிக்கும் அடியை தவிர வேறு எந்த அடியும் அந்தளவு வலிக்காது.

அதே நேரம் நாளை மு.காவின் பிரச்சார கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றால், அதை வைத்து மு.காவின் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடிப்பது எதிர்காலத்தில் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

குறித்த கூட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இடத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை பிரதி அமைச்சர் ஹரீஸ் விஜயம் செய்திருந்தார். இதன்போது எந்தவிதமான சல சலப்புக்களும் இடம்பெறவில்லை. இதே நிலை நாளை தொடரும் என்று நம்பப்படுகிறது.

சாய்ந்தமருதில் பதட்ட நிலையை ஏற்படுத்த முனையும் அமைச்சர் ஹக்கீமின் தந்திரத்துக்குள் சாய்ந்தமருது மக்கள் அகப்பட்டுக்கொள்ளக் கூடாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்