தொழில் வழங்குவதற்கு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா; அன்சில் கேள்வி

🕔 February 1, 2018

– றிசாத் ஏ காதர் –

முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில் வழங்குவதற்காக, பொதுமக்களினடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.. அன்சில் கேள்வியெழுப்பினார்.

பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு சட்டத்தரணி அன்சில் மேலும் கூறுகையில்;

முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதங்களை மக்களுக்கு மத்தியில் விலைபேசி வியாபாரம் செய்தபோது, அதற்கெதிராக நாங்கள் பேசினோம். இவற்றையெல்லாம் செய்தவர்களை மேடைகளில் ஏற்றி, மாலையணிவிக்கின்ற வேலையை செய்கின்றவர்களாக உலமாக்கள் இன்று மாறியிருக்கின்றார்கள். நீங்கள் யாருக்கு வாக்களிக்களிக்கிறீர்கள் என்பதனை தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது அஷ்ரபுடைய கட்சியாக இருந்தால், இந்தக் கட்சியினுடைய அதிகாரங்களை கொண்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அஷ்ரபுடைய காலத்தில் அதிகாரங்களினூடாக கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்கள் எப்படி மக்களின் காலடிக்கு கொண்டு செல்லப்பட்டதோ அப்படி கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அதுவல்லாமல் அந்த வரப்பிரசாதங்கள் விற்பனை செய்யப்டுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடாது.

இது அஷ்ரபுடைய கட்சியாகவிருந்தால் இதனுடைய தீர்மானங்களை இந்தியாவோ, நோர்வேயோ அல்லது வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களோ எடுக்கிற நிலைமை முஸ்லிம் காங்கிரசுக்குள் இருக்கக் கூடாது. தலைவர் அஷ்ரபுடைய கட்சியாவிருந்தால் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலேனும் மரச் சின்னத்திலன்றி யானைச் சின்னத்தில் போட்டியிடுகிற நிலைமை வந்திருக்கக் கூடாது. இவை அனைத்தையும் செய்து விட்டு, அஷ்ரபுக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள் என்று கேட்பது வெட்கம்கெட்ட தனமாகும்.

தலைவர் அஷ்ரபுடைய கட்சியை பாதுகாக்கத் தேவையில்லை, அவருடைய கொள்கையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அஷ்ரபுடைய கொள்கையை அப்படியே மாற்றிப்பேசுகின்ற ரவுப் ஹக்கீமை பாதுகாக்க முனைந்தால், தலைவர் அஷ்ரபுடைய கட்சி அழிந்துபோய்விடும்.

தற்போது பாலமுனை வைத்தியசாலை பற்றிய புதிய புரளிகளை கிளப்புகின்றனர். அந்த வைத்தியசாலை என்னால் தரம் குறைக்கப்பட்டதாக சொல்லுகின்றனர். வைத்தியசாலையினை தரம் குறைப்பதும், கூட்டுவதும் என்னுடைய வேலையல்ல. அப்படி நான்தான் இந்த வைத்தியசாலையை தரம் குறைத்திருந்தால், முஸ்லிம் காங்கிரசிலிருந்து நான் விலகி ஒரு வருடமாகின்றது. ஏன் உங்களால் அதனை தரமுயர்த்த முடியாதுள்ளது. முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தம கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இருந்தார், மத்திய அரசாங்கத்தின் பிரதி சுகாதார அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவராவார். அப்படியென்றால் ஏன் தற்போது அதனை உங்களால் முடியாதுள்ளது. மீளவும் மாவட்ட வைத்தியசாலை என்று பெயர்ப்பலகையை காட்சிப்படுத்துங்கள். தற்போதுள்ள அரச நடைமுறை வேறானது. அதனை புரிந்துகொள்ளுங்கள். வைத்தியசாலையின் தரங்கள் .பீ.சீ என மாற்றப்பட்டுள்ளது. அந்த தரத்துக்குள் பாலமுனை வைத்திசாலை எவ்விடத்தில் இருக்கின்றது என்று பாருங்கள். வெறுமனே அபாண்டங்களை சுமத்துவதனை தவிர்த்து விடுங்கள்.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையின்  நுழைவாயிலுக்கான வளவு கொள்வனவுக்கு பணம் தேவைப்பட்டபோது, தொழில் எடுக்க இருப்பவர்கள் ஒன்றரை இலட்சம் தாருங்கள் என்று கேட்ட சம்பவங்கள் இருக்கின்றன. நீங்கள் பணம் கொடுத்தவர்கள், உங்களிடம் பணம் பெற்றுக்கொண்டவர்களை அழைத்து வந்து, மாலைபோட்டு பேசுவதுக்கு இடம்கொடுக்க வெட்கமில்லையா என்று கேட்க விரும்புகின்றேன்.

இந்தக் கட்சியினூடாக மாகாண சபையில் பதவி வகித்தவர்கள் வழங்கிய தொழில்களைப் பெற்றவர்களில் அதிகமானவர்கள் தமிழ்  இளைஞர்களாவர். அந்தப்பட்டியல் எம்மிடமுள்ளது. அத்தனை தொழிலையும் நான்கு தொடக்கம் ஐந்து லட்சத்துக்கு விற்றுள்ளனர். அவர்கள் வந்து நின்று, மேடைகளில் என்னை ஊழல்வாதி என்று கூறுகின்றனர்” என்றார்.  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்