சின்ன நண்பியை தேடிச் சென்ற ஜனாதிபதி; பாட்டுப்பாடி மகிழ்ந்தார்

🕔 January 29, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் கொழும்பு வந்து சந்தித்த, பதுளையைச் சேர்ந்த ஏழு வயதான எம்.என். அமானி ராயிதா எனும் சிறுமியை மறந்திருக்க முடியாது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பதுளை சென்றிருந்த ஜனாதிபதி, சிறுமி ராயிதாவின் வீட்டுக்கு வருகை தந்து, அவருடைய நண்பர்களுடன் பேசியும், பாட்டுப்பாடியும் மகிழ்ந்தார்.

அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு பதுளையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.  எவ்வித முன் அறிவித்தலுமின்றி வந்திருந்த இப்பயணத்தில் ஜனாதிபதியை சந்திக்கக் கிடைக்குமென்று அச்சிறுமியோ சிறுமியின் பெற்றோரோ சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை.

ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் சிறுமியொருவர் தன்னைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அறிந்து கொண்ட ஜனாதிபதி, தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி அச்சிறுமியை தன்னிடம் அழைத்து பேசி மகிழ்ந்தார்.

ஜனாதிபதியுடன் மகிழ்ச்சியாக உரையாடிய அச்சிறுமி தனது கைகளினால் வரைந்த சித்திரமொன்றை ஜனாதிபதிக்கு வழங்கியதோடு, பதுளைக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். வர முன்பதாக தொலைபேசி மூலம் தனக்கு தெரியப்படுத்துமாறும் அவர் ஜனாதிபதியிடம் செல்லமாக கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்குபற்றியதன் பின்னர் தனது பரபரப்பு மிகுந்த வேலைகளுக்கு  மத்தியிலும், சிறுமி ராயிதாவின் வீட்டுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார்.

இதன்போது தனது நண்பர்களுடன் ஜனாதிபதியின் வருகையை எதிர்பார்த்திருந்த அமானி ராயிதா என்ற அச்சிறுமி, தனது வீட்டுக்கு வந்த ஜனாதிபதியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

பின்னர் சிறுமி ராயிதா பாடிய பாடலொன்றைக் கேட்டு மகிழ்ந்த ஜனாதிபதி, அங்கிருந்த சிறுவர்களுடன் சேர்ந்து பாடலொன்றையும் பாடி மகிழ்ந்தார்.

ஜனாதிபதி விடைபெற்றுச் செல்லும் வேளையில் கொழும்புக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னைப் பார்க்க வருமாறு அச்சிறுவர்களுக்கு அன்பான அழைப்பையும் விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்