ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது
🕔 January 28, 2018
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர்.
வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, ஆகக் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரச பணியாளர்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வீதியொன்றில் அமைந்துள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில், அம்பியுலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதுல் நடத்தப்பட்ட இடத்துக்கு அருகாமையில் அந்த நாட்டின் உள்துறை அமைச்சு முன்னர் இயங்கி வந்த கட்டடம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்கானிஸ்தானின் உயர் சமாதான சபை ஆகியவற்றின் அலுவலகங்களும் அமைந்துள்ளன.
குறித்த தாக்குதலை தலிபான் அமைப்பு நடத்தியதாக உரிமை கோரியுள்ளது.
தாக்குதுல் நடத்தப்பட்ட போது மிகவும் சன நெரிசல் காணப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம், ஹோட்டலொன்றில் தலிபான் அமைப்பு நடத்திய தாக்குதலொன்றில் 22 பேர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையில் படையெடுக்கப்பட்டு, 2001ஆம் ஆண்டில், தாலிபன் அமைப்பு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், அந்த நாட்டின் கணிசமான பகுதிகள் இன்னும் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.