போலி வாக்குச் சீட்டுகளை பகிர்ந்த, பெண் வேட்பாளர் கைது
போலியான வாக்குச் சீட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்த பெண் வேட்பாளர் ஒருவரை, நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
கரைச்சி பிரதேச சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் மேற்படி பெண் வேட்பாளர், நேற்றைய தினம் – தபால் மூல வாக்காளர்களுக்கு போலி வாக்குச் சீட்டுக்களை வழங்கிக் கொண்டிருந்த போது கைதானார்.
உண்மையான வாக்குச் சீட்டு மாதிரியாக, மேற்படி போலி வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதானவர், இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.