மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார்

🕔 January 25, 2018

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அவரே உறுதிப்படுத்தினார்.

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்த வாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்தார்.

அதன்போது ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனைக்கு கடந்த 15 வருட காலமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி வந்த போதிலும், தற்போதுதான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள நசீர், 2011ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டதன் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்தார்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகப் பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர், அதிலும் வெற்றி பெற்றதோடு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்