வன்னி அமைச்சரின் பணத்துக்காக புத்தளத்தில் ஐ.தே.கட்சி குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது: ஹக்கீம் குற்றச்சாட்டு

🕔 January 20, 2018
படத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணத்துக்காக புத்தளம் மக்கள், தங்களின் சுயகெளரவம், தன்மானம் என்பவற்றை இழக்கமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்துவார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்‌று வெள்ளிக்கிழமை இரவு புத்தளத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சி மீது இப்போது மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தனக்கென பணம் சம்பாதிக்காக தலைமைகள்தான் ஐ.தேம்.வில் இருந்துள்ளன. டட்லி சேனாநாயக்க மரணித்தபோது அவருடைய வங்கி கணக்கில் 1500 ரூபா மாத்திரமே இருந்தது என்று ஐ.தே.கட்சிக்காரர்கள் பெருமைப்படுகின்றனர். ஜே.ஆர். ஜயவர்தன தனது மரணத்தின் பின் அனைத்து சொத்துகளையும் பொதுத் தேவைக்காக எழுதிக்கொடுத்தார்.

இப்படியான கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள், இப்போது பணத்துக்காக புத்தளத்தில் கட்சியை குத்தகைக்கு விட்டுள்ளனர். புத்தளத்தில் எங்களுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு ஐ.தே.க. விரும்பியபோதும், அதன் உள்ளூர் தலைமைகள் விரும்பவில்லை. வன்னி அமைச்சரின் பணத்துக்காக இப்படி கட்சியை குத்தகைக்கு விட்டிருப்பதானது, அசல் ஐ.தே.க. காரர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

மக்களை விலைக்கு வாங்கும் வங்குரோத்து அரசியலுக்கு புத்தளம் மக்கள் ஒருபோதும் சோரம்போமாட்டார்கள் என்பதை இங்கு வந்திப்பவர்களே கட்டியம் கூறுகின்றனர். கபடத்தனமாக சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு புத்தளம் மக்களின் தன்மானத்தை பேரம்பேசுவது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது. சில ஆயிரம் வாக்குளை விலைக்கு வாங்கி, தன்னை தேசிய தலைவராக காட்டிக்கொள்ளும் கனவில் மிதந்துகொண்டிருக்கும் அரசியல்வாதியின் அட்டாகசம் முடிவுக்கு வரவேண்டுமா இல்லையா என்பதை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

நஞ்சுப் போத்தலை வைத்துக்கொண்டு பயம்காட்டி, அரசியலுக்கு வந்தவர்கள் இப்போது தம்பிமாரை வைத்து, மக்களை மாத்திரமின்றி ஏனைய கட்சி அரசியல்வாதிகளையும் விலைக்கு வாங்குகின்ற கேவலம் இந்த மண்ணில் நடந்துகொண்டிருக்கிறது. செல்கின்ற இடங்களில் எல்லாம் பணத்தை வாரியிறைத்து ஆசனங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கின்றனர். இவற்கு மக்கள் பதில் சொல்லவேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது.

மறைந்த தலைவர் அஷ்ரஃபின் சகவாசமே இல்லாத வன்னி அமைச்சர், அவருடன் வாழ்ந்ததுபோல காட்டிக்கொண்டு, அவரின் படங்களையும் சேர்த்து பிரசுரங்களை வெளியிடுவது நகைப்புக்குரிய விடயம். அஷ்ரஃபின் மகோன்னத அரசியல் தெரியாத இவர்‌கள் மேடைகளில் ஏறிக்கொண்டு, அவரின் அரசியலைப் பற்றி ஏங்கி, ஏங்கி பேசித்திரிகின்றனர். இப்படியான பச்சோந்தி அரசியல்வாதிகளின் விலைபேசலுக்கு உண்மையான போராளிகள் யாரும் சோரம்போக மாட்டார்கள்.


(மு.கா. ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்