அமைச்சுக்கள் சிலவற்றினை ஜனாதிபதி கையகப்படுத்தக் கூடும்: கபே நிறைவேற்று அதிகாரி தகவல்
சட் டம், ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சுக்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும், ஜனாதிபதி தன்வசப்படுத்திக் கொள்ளக் கூடும் என்று, கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
மோசடிக் காரர்களை கைதுசெய்வதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவே, ஜனாதிபதி இவ்வாறு செய்யக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜகிரிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
தனது பதவிக்காலம் நிறைவடையும் காலம் எப்போது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்கு தெரியும்.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி தொடக்கம், 2018 ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் திகதி வரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று சுமார் 1098 நாட்கள் நிறைவடைந்து விட்டன.
அப்படியாயின் இன்னும் 696 நாட்கள் மாத்திரமே அவரின் பதவிக் காலம் உள்ளன.
ஜனவரி 15 ஆம் திகதியாகும் போது ஜனாதிபதி சில விடயங்களை நாட்டு மக்களுக்கு கூறலாம். அதாவது தனது ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் நிறைவடைந்து விட்டன என்றும், இன்னும் இரு வருடங்களில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும் சொல்லலாம்.
இதற்காக நீதி, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி அதிரடியாக தன்வசம் கையகப்படுத்தி கொள்ளலாம்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் தன்கையில் எடுத்துக் கொள்ளலாம்.
தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு இவ்வாறு செய்வது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடினமான காரியமல்ல” என்றார்.