‘டாட்டா’ குழும பிரதிநிதிகள் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு; இலங்கையில் முதலீடு செய்யவும் ஆர்வம்
🕔 May 26, 2015
இந்தியாவின் பாரிய வர்த்தக, கைத்தொழில் நிறுவனமான ‘டாட்டா சன்ஸ்’ குழுமத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீமை இன்று செவ்வாய்கிழமை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘வோட்டர்ஸ் எஜ்’ ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ‘டாட்டா’ குழுமத்தின் நிறைவேற்று சபைத் தலைவரும், சர்வதேச வர்த்தக அபிவிருத்தி மற்றும் பொது விவகார தலைவருமான மது கண்ணன் – மேற்படி பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
இலங்கையில் – நகர அபிவிருத்தி மற்றும் பயனுள்ள பல துறைகளில் கூடுதலான முதலீடுகளை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை கண்டறிவதே, மேற்படி ‘டாட்டா’ குழும பிரதிநிதிகளுடைய விஜயத்தின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சந்திப்பில், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பீ. சுரேஷ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நயன மாவில்மட மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிஷான் கருணரத்ன உட்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.