ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு

🕔 August 16, 2015

SLMC - 01ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் மற்றும் மத்திய மாகாண  சபை உறுப்பினர்  ஏ.எல்.எம். உவைஸ் ஆகியோரை, கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு – கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் தீர்மானத்துள்ளது.

அத்துடன்,காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரான சல்மா ஹம்ஸா, வேறொரு கட்சியில் வேட்பாளராகப்  போட்டியிடும் தனது சகோதரரை ஆதரித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடாமை போன்றவற்றுக்கான போதிய  ஆதாரங்கள் கட்சிக்குக் கிடைத்துள்ளதால், அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர் வகிக்கும் அனைத்துப் பதவிகளில் இருந்தும்  – ஏன் நீக்கக்கூடாது என்று அவரிடம் விளக்கம் கோருவதற்கும், உயர்பீடம் தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமின் தலைமையில்  நேற்று சனிக் கிழமை இரவு, கண்டியில் கூடிய – முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீடம், இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் வேறொரு கட்சிக்கு ஆதரவாகவும், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகவும் செயற்படுகின்றமையால், அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர் வகிக்கும் அனைத்துப் பதவிகளில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் ஏன் நீக்கக்கூடாது என்று அவரிடம் ஏற்கனவே விளக்கம் கோரப்பட்டிருந்தது.

ஆயினும், அவர் இதுவரை இது தொடர்பில் கட்சிக்கு விளக்கம் கொடுக்கவோ அல்லது விளக்கம் கொடுக்கக் கால அவகாசம் கோரவோ இல்லை. இதனால், அவரை மேற்படி பதவிகளில் இருந்து நீக்குவது என்று கட்சியின் உயர்பீடம் தீர்மானித்தது.

அத்தோடு, முஸ்லிம் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், கட்சியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை  உவைஸ் ஏற்றுக்கொண்டார் என, விசாரணைக் குழு – சனிக் கிழமை கட்சியின் உயர்பீடத்திற்கு அறிவித்தது.

அதன் அடிப்படையில், அவரையும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர் வகிக்கும் அனைத்துப் பதவிகளில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு, கட்சியின் உயர்பீடம் தீர்மானித்தது.

அத்துடன், காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரான சல்மா ஹம்ஸா, வேறொரு கட்சியில் வேட்பாளராகப் போட்டியிடும் தனது சகோதரரை ஆதரித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். அதற்கான போதிய ஆதாரங்கள் கட்சிக்குக் கிடைத்துள்ளதால், அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர் வகிக்கும் அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஏன் நீக்கக்கூடாது என்று, அவரிடம் விளக்கம் கோருவதற்கும் உயர்பீடம் தீர்மானித்தது.

ஜெமீல் மற்றும் உவைஸ் ஆகியோரை  மாகாண  சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான கட்சியின் தீர்மானத்தை, தேர்தல் ஆணையாளருக்கும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அறிவிக்குமாறு, கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரிஹஸன் அலியை அதி உயர்பீடம் கோரியுள்ளது.

மேலும், மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் வகித்து வரும் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குவற்கும் உயர்பீடம் முடிவெடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்