பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

🕔 January 7, 2018

– மப்றூக் –

ஊப் ஹக்கீம் என்பவர் பழக்க தோசத்தினால்,  மு.காங்கிரஸ் எனும் கட்சியையும் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ரஊப் ஹக்கீமை எல்லா இடங்களிலும் தோற்கடித்து, அதன் மூலம் ஹக்கீமிடம் சிறைப்பட்டுக் கிடக்கும் மு.காங்கிரசை மீட்டெடுப்பதுதான் தங்களின் கடமை எனவும் அவர் கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சனிக்கிழமை இரவு, நிந்தவூர் வைத்தியசாலை வீதிக்கு அருகாமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதவியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இங்கு பசீர் சேகுதாவூத் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மு.காங்கிரசின் தந்தை அஷ்ரப் மரணித்த போது, அந்தக் கட்சிக்கு ரஊப் ஹக்கீமை ஒரு சாச்சாவாக (சிறிய தந்தை) ஆக்கினோம். சுமார் 05 லட்சம் மக்களுக்கு ஒரு வளர்ப்புத் தந்தையாக இருங்கள் என்று, அந்த சிறிய தந்தைக்கு நாங்கள் அங்கீகாரம் வழங்கினோம். ஆனால், அவர் இப்போது நமது கட்சியை சிறைப்பிடித்து, பழக்க தோசத்தில் ‘வச்சிருக்க’த் தொடங்கி விட்டார்.

கிழக்கு மாகாணத்துக்கிருந்த ஒரேயொரு அரசியல் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸாகும். அது அம்பாறையின் முதுகெலும்பாக இருந்தது. அந்தக் கட்சியைக் காப்பாற்றுவதற்காக, கிழக்கு மக்களின் ஆயிரக்கணக்கான உயிர்களை  நாங்கள் பறிகொடுத்துள்ளோம்.

ஆனால், தற்போது அந்தக் கட்சியை ‘வச்சிருக்கிறவர்’ அதனைப் பறி கொடுத்து விட்டார். அதனை அடகு வைத்து விட்டார்.

முஸ்லிம் காங்கிரசை வளர்த்தெடுப்பதற்கான போராட்டத்துக்காக ஒரு முட்டையை, ஒரு ஐஸ் கிறீமை கூட இழக்காத ரஊப் ஹக்கீம்,  இப்போது அந்தக் கட்சியை தனது கச்சைக்குள் வைத்திருப்பது நியாயமா என்று நாம் கேட்கிறோம்.

எனவே, முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை மீட்டெடுத்து எமது தாய்மார்களின் மடிகளிலும், தந்தையர்களின் தோள்களிலும் மீண்டும் தவள விடுவதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாகவே எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நாம் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தல்களில், முஸ்லிம் காங்கிரசை பயன்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுமதியளித்து, ஐக்கிய தேசியக் கட்சியை முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தி வந்தது. அது ஓர் உத்தியாகும்.

ஆனால்,  இப்போது அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில், யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதனூடாக, நமது கட்சி தொலைக்கப்பட்டு விட்டது. இதனால், மு.காங்கிரசுக்கு என்ன நன்மை இருக்கிறது என்று ஹக்கீம் கூறவேண்டும்.

முகாங்கிரசை மீட்கும் போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மூலம் அடையாளத்தினையும், அங்கீகாரத்தினையும் பெற்றுக் கொண்ட நான் உட்பட, ஹசனலி, றிசாட் பதியுதீன், அதாஉல்லா என, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று, நான் அழைப்பு விடுக்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்