பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா

🕔 January 4, 2018
– ஆர் ஹசன் –
பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார். 

காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;

“மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவாக எடுத்துரைத்து அதற்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் குற்றவாளிகளை பாதுகாக்காது என்பதற்கு இது சிறந்ததோர் உதாரணமாகும்.

ஜனாதிபதியின் ஒவ்வொரு முன்னெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்தின் நலன் கருதியதாகும். பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்