மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை

🕔 January 3, 2018

தேர்தல் வருவதால் வசிம் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மிக விரைவில் மேடை ஏறுவார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இத்தனை காலம் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபிக்காது, பாமர மக்களைப் போன்று, எம் மீது போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கியவாறு, ஆட்சியாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கை மக்கள் அனைவரும் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இந்த தேர்தலானது இலங்கை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக அமையப் போகிறது என்பதில் ஐயமில்லை. எமது தோல்விக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாட்சியாளர்கள் மேற்கொண்ட போலிப் பிரச்சாரங்கள்தான் பிரதான காரணமாக இருந்தன.

நாங்கள் தான் ரக்பி வீரர் தாஜுதீனை கொலை செய்தோம் என்ற பெரும் குற்றச்சாட்டை கூறியிருந்தார்கள். முதலில் எனது சகோதரரின் பெண் தோழிக்காக அக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுவே எம் மீதான போலிக் குற்றச்சாட்டு என்பதற்கான போதுமான சான்றாகும்.

இதனை சாதாரணமாக சிந்திபோரும் அறிந்து கொள்வர். தேர்தல் வருவதால் மிக விரைவில் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மேடை ஏறுவார்கள்.

அது மட்டுமல்ல, நாங்கள் பாரியளவில் பணத்தையும், நகைப் புதையல்களையும், லம்போகினி வாகனங்களையும், மாட மாளிகைகளையும் வைத்திருப்பதாக கூட பிரச்சாரச்சாரம் மேற்கொண்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. இவர்கள் கூறியதில் ஒன்றையாவது நிரூபித்துள்ளார்களா? மூன்று வருடங்களில் எத்தனையோ விடயங்களை சாதித்திருக்கலாம். எனது தந்தை ஆட்சிக்கு வந்து நான்கு வருடத்துக்குள் நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தையே முடித்து காட்டியிருந்தார்.

இவர்கள் எங்கள் மீது முன்வைத்த ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க முடியாதா? பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும். எமது தங்கப் புதையலை கண்டு பிடிக்க நீச்சல் தடாகங்களை தோண்டிய சம்பவங்களை கூட நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவ்வாறு தோண்டியவர்களுக்கு ஏமாற்றமே இறுதியில் எஞ்சியது. அவர்கள், தங்களது கற்பனையில் வரைந்து வைத்திருந்தவை எப்படி உண்மையாகும்?

மூன்று வருடங்கள் கடந்தும், எதனையும் நிரூபிக்க முடியாதவர்கள், மக்கள் முன்பாக வந்து, நாம் அதை செய்தோம், இதை செய்தோம் என கூற வெட்கப்பட வேண்டும். இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ளும் மக்களை போன்ற ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இவற்றை மக்கள் நம்பும் காலம் மலையேறிவிட்டது. இருந்தாலும், மக்களின் உள்ளத்தை உளவியல் ரீதியாக மாற்றும் வண்ணம் வருகை தந்து, இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கலாம். அவை தொடர்பில் மக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருப்பதோடு ஏனையோரை விழிப்படையச் செய்ய வேண்டும்” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்