றிசாட் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன்: ஜவாத்

🕔 January 1, 2018

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – தனிமனித ஆதிக்கத்தில் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவர் சர்வதிகாரியாக மாறியுள்ளார். அதனால், மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளியேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் எனும் மனிதரின் நல்ல பண்புகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டேன் என்று, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே.ஏ. ஜவாத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல், அம்பாறையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜவாத் இவ்வாறு தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜவாத் மேலும் கூறுகையில்;

“அம்பாறைமாவட்டம் அரசியல் அனாதையாக்கப்பட்டுவிட்டது என்று அழுதழுது ஒவ்வொரு நாளும் நாம் வடித்த கண்ணீருக்கு விடையாக, இங்கிருப்பவர்களை நான் காண்கின்றேன். இந்தக் கட்சியில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் வீரத் தியாகிகளாக மாறி, இந்தக் கட்சிக்காக உழைத்து சமூகத்தில் புது வரலாறு படைக்க வேண்டும்.

எமது இரத்தத்தினாலும், கண்ணீரினாலும், வியர்வையினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இவ்வாறான ஒரு கூட்டத்தை அம்பாறையில் நடத்தக் கூடிய சக்தி இல்லாததை நினைத்து பரிதவிக்கின்றோம்.

தனிமனித ஆதிக்கத்தில் அக்கட்சி அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவருக்குரிய சர்வ சக்திகளும் அவரை ஒரு சர்வாதிகாரியாக இன்று மாற்றியுள்ளது. மறைமுகமாகவோ, நேரடியாகவோ நாங்களும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கின்றோம் என்ற வேதனை ஒரு புறமிருந்தாலும், மு.காவின் உயர்பீடம் தனிமனிதனுக்கு ஏகபோக உரிமையை வழங்கும் போது, அதனை எதிர்க்கும் திராணியை பலதடவை இறைவன் எனக்குத் தந்தான் என்பதில் ஒரு மனத்திருப்தி காண்கின்றேன்.

நாங்கள் கடந்த காலங்களில் மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளியேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. ஆனால், ரிஷாட் பதியுதீன் என்ற அரசியல்வாதியில் இருக்கின்ற அடையாளங்கள், அவரில் இருக்கும் பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் அவரிடம் நாங்கள் கண்ட பழக்கவழக்கங்கள் காரணமாகவே, எங்களுக்கு அவர் தலைமையிலான கட்சியில் நம்பிக்கை கொள்ளவைத்தது.

நாங்கள் உள்ளத்தினால் உருகிக் கேட்ட பிரார்த்தனைகளுக்கு இறைவன் புது வழியை காட்டியுள்ளான். அதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இப்போது இந்த இரண்டாம் கட்ட தர்ம யுத்தத்தில் கால் பதித்துள்ளோம். இந்த யுத்தத்தை நாங்கள் புனித யுத்தமாகவே கருதுகின்றோம். காசு, பணம், பதவி என்பவை, ஓர் அரசியல்வாதியை தாக்கத்துக்கு உள்ளாக்கி வருகிறது என்ற நிலைகளுக்கு அப்பால், நாம் இந்த சமூக விடுதலைப் போராட்டத்தில் இதய சுத்தியுடன் குதித்துள்ளோம்.

மாதலைவர் மர்ஹூம் அஷ்ரப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கிய போது, கண்ட கனவில் ஒன்று மட்டுமே சரியாக நிறைவேறியிருக்கின்றது. முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாதத்திலோ, ஆயுதக் குழுக்களுடனோ இணையக் கூடாது என, அவர் கண்ட கனவு வெற்றி கண்டுள்ளது. அதனாலேதான் நாங்களும் நடுநிலையாளர்களாக, அரசியல்வாதிகளாக, சமூகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டுளோம்” என்றார்

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ. ஹசன் அலி, செயலாளர் எஸ். சுபைர்தீன், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம். ஜெமீல், எஸ்.எம்.எம். இஸ்மாயில், எம்.ஏ. அப்துல் மஜீத்,  ஏ.ஆர்.எம். ஜிப்ரி. தலைமை வேட்பாளர்களான ஏ.எம்.எம். நௌஷாட், எம்.ஏ. அன்சில் மற்றும் எம்.ஏ.எம். தாஹிர் உட்பட தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்