இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா
இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சு, இலங்கை தேயிலை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்தே, இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கிடையில் – குறித்த பேச்சுவார்த்தை மொஸ்கோவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில், வண்டு ஒன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இலங்கைத் தேயிலை இறக்குமதிக்கு, ரஷ்ய அரசாங்கம் தற்காலிகத் தடை விதித்திருந்தது.