தேசிய மீலாதுன் நபி விழா, யாழில் நடைபெற்றது; நினைவு முத்திரையும் வெளியீடு

🕔 December 24, 2017
– பாறுக் ஷிஹான் –

தேசிய மீலாதுன் நபி விழா, யாழ்ப்பாணம் ஒஸ்மோனியாக் கல்லூரி வளாகத்தில்  நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கரு ஐயசூரிய கலந்து கொண்டார்.

இதன் போது, 2017ம் ஆண்டின் தேசிய மீலாதுன் நபி விழா ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த முத்திரையை  பிரதம விருந்தினரான சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும்  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால்துறை  அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

ரூபா 15 பெறுமதியான இந்த முத்திரையில், யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம் (புதுப்பள்ளி) இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முத்திரைக்கான புகைப்படத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மாணவரும்,  தற்போதைய ஊடகவியலாளருமான பாறுக் ஷிஹான் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இவ்விழாவில் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதீயுதீன், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. சரவணபவன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோர் உட்பட, அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விழாவில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரால் வருகை தர முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்