அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்

🕔 December 19, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான சாத்தியங்கள், அரசியல் அரங்கில்தான் அதிகம் உள்ளன.

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில வேட்புமனுக்கள் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்றுக் கொள்ளப்பட்ட சில வேட்புமனுக்களிலுள்ள சில வேட்பாளர்களின் பெயர்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முதன் முதலாக கலப்புத் தேர்தல் முறையில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான வேட்புமனுக்களை நிரப்புவதும் புதிய அனுபவமாகும். இதில் நிகழ்ந்த சில தவறுகளாலும், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.

இன்னொருபுறம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அரசியல் கட்சிகள் தனித்தும் கூட்டாகவும் களமிறங்கியுள்ளன. சில அரசியல் கூட்டுகள் ஆச்சரியமளிப்பதாக உள்ளன. அரசியலில் எதுவும் சாத்தியம்தான் என்பதை, காலம் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

முஸ்லிம் அரசியல் அரங்கில் அம்பாறை மாவட்டத் தேர்தல் களம் முக்கியமானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் அம்பாறை முதன்மையானது. அதேவேளை, முஸ்லிம் சமூகத்தில் பிரதான அரசியல் கட்சியாகவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளம் என அறியப்படுவதும் அம்பாறை மாவட்டமாகும். அதனால், அம்பாறை மாவட்டத்தைத் தவிர்த்து முஸ்லிம் அரசியல் பற்றிப் பேச முடியாது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் கூட்டணி எனும் பெயரில் பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹசன் அலி ஆகியோரின் ஐக்கிய சமாதான கூட்டணியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அந்தக் கட்சியின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும் அதன் குதிரைச் சின்னத்தில் அங்கு போட்டியிடுகிறது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் பிரதான கட்சி எனக் கூறப்படுகின்ற முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னம் இம்முறை அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் இல்லை என்பது, அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் கசப்பான செய்தியாகும்.

அம்பாறை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும், ஐக்கிய தேசியக் கட்சியியுடன் இணைந்து, யானைச் சின்னத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்து, அதன் மரச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று, கட்சியின் உள்ளூர் மட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், யானைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்திலிருந்து மு.கா தலைமை விலகவில்லை.

மு.காவின் கோட்டை என்று கூறப்படும் அம்பாறை மாவட்டத்தில், ஒரு குட்டித் தேர்தலில் அந்தக் கட்சியால் தனித்துக் களமிறங்க முடியாமல் போனமை குறித்து, மு.கா ஆதரவாளர்களுக்குத் தன்மானப் பிரச்சினை உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடம், ஐக்கிய தேசியக் கட்சி குறித்து, கசப்பானதோர் அபிப்பிராயம் உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப் பகுதியில், புத்தர் சிலையை அடாத்தாகக் கொண்டு வந்து வைத்ததன் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைச்சர் தயா கமகே இருந்தார் என்று கூறப்படுவதை, முஸ்லிம் மக்கள் மிக நன்கு அறிவர். “மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டிருக்கும் சிலையை அரசாங்கம் அகற்றினால், எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வேன்” என்று, அமைச்சர் தயாகமகே பகிரங்கமாகக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதனால்தான், மாயக்கல்வி மலையில் புத்தர் சிலையை வைத்ததற்கும், அதனை அகற்றாமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்கிற முடிவுக்கு இங்குள்ள முஸ்லிம் மக்கள் வந்தனர். அதன் காரணமாகத்தான், ஐக்கிய தேசியக் கட்சியை அண்மைக்காலமாக விரோதத்துடன் பார்க்கத் தொடங்கினர்.

இந்த ஈரம் காய்வதற்குள்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ளார்.

எனவேதான், உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று, அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் தீர்மாமொன்றை எடுத்து, அதைக் கட்சித் தலைவருக்கும் அறிவித்திருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, அதன் யானைச் சின்னத்தில் மு.கா போட்டியிடுவது குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களிடையே அதிருப்தி உள்ளமை குறித்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமும் மிக நன்கு அறிவார். ஆகவேதான், “ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், யானையின் பாகனாகத்தான் நாங்கள் இருப்போம்” என்று மு.கா தலைவர், புத்தளத்தில் வைத்துக் கூற நேர்ந்துள்ளது.

அதாவது, ‘ஐ.தே.கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், அந்தக் கட்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமை எங்களிடம்தான் உள்ளது’ என்று, மு.கா தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், மு.கா தலைவர் சொல்வதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை, மு.கா தலைவரே மிக நன்றாக அறிவார். இன்னொருபுறம், பாகனை அடித்துக் கொன்ற யானைகளின் கதைகள் இருப்பதையும் நாம் மறத்தலாகாது.

ஐ.தே.க எனும் யானையின் நிஜ பாகனான ரணில் விக்ரமசிங்கவின் கையில் அங்குசம் இருக்கும் போதே, இடைக்கிடையே யானை விரண்டமை குறித்து ஊரே அறியும்.
இந்த நிலையில், வெறுங்கையுடன் யானையை அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, பாகன் வேலை பார்க்கப் புறப்பட்டிருக்கும் நிலை பரிதாபத்துக்குரியதாகும்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூக்கணாங்கயிறு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தயாகமகேயின் கைகளில்தான் உள்ளது.

தயா கமகே, ஐ.தே.கட்சிக்கு நிதியுதவியளிக்கும் பெரும் வர்த்தகர் எனும் வகையிலும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் எனும் வகையிலும், அந்தக் கட்சி மீது அவரின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிகமாகச் சிரமப்படத் தேவையில்லை.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றிகள், அமைச்சர் தயா கமகேயின் கைகளை அவரின் கட்சிக்குள் மேலும் பலப்படுத்தும் என்பதும் உண்மையாகும். அதனால்தான், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மு.கா போட்டியிடக் கூடாது என்று, அந்த மாவட்டத்திலுள்ள மு.கா முக்கியஸ்தர்கள் தீர்மானம் எடுத்திருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து  முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான தீர்மானத்தை ரவூப் ஹக்கீம் ஏன் எடுத்தார் என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில்
ஐ.தே.கட்சிக்குப் பெரிதாக ஆதரவு இல்லை என்பதை, கடந்த கால உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வசமுள்ள எட்டு உள்ளூராட்சி சபைகளில், கல்முனை மாநகரசபையில் மட்டும்தான், ஐ.தே.கட்சி சார்பாக ஓர் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

எனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறானதொரு பலவீனமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள ஒரு கட்சியுடன், கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் மு.காவுக்கு என்னதான் நன்மை இருந்துவிடப் போகிறது என்கிற கேள்வியைத் தட்டிக் கழித்து விடவும் முடியாது.

ஐ.தே.கவுடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவதில், மு.கா ஆதரவாளர்களுக்கு அதிருப்தி உள்ளது என்பதை மு.கா தலைவரும் அறியாதவராக இல்லை. மு.காங்கிரஸின் முதலாவது பிரசாரக் கூட்டம் எங்கு நடத்தப்பட்டது என்பதை வைத்து, அதனை விளங்கிக் கொள்ள முடியும்.

அம்பாறை மாவட்டம்தான் மு.காங்கிரஸின் கோட்டையாகும். நியாயப்படி அங்கிருந்துதான் அந்தக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், மு.காவின் முதலாவது பிரசாரக் கூட்டம் புத்தளத்தில்தான் நடைபெற்றது. காரணம் என்ன? புத்தளம் நகரசபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆனால், அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. என்னதான் கூட்டணியமைத்துப் போட்டியிட்டாலும், தமது கட்சி தனித்துப் போட்டியிடும் பிரதேசத்திலிருந்து முதலாவது பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிப்பதுதான், தங்களுக்கு மரியாதை என்று மு.கா தலைவர் நினைத்திருக்கக் கூடும்.

இன்னொரு புறம், ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியின் தராசு சின்னத்திலும், ஜனநாயக ஐக்கிய முன்னணி எனும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திலும் கூட, முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. இந்தத் தகவலை மு.கா தலைவர் ஹக்கீமும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேற்படி கட்சிகளில், தராசு சின்னத்தைக் கொண்ட கட்சியின் செயலாளராக எம். நயீமுல்லா பதவி வகிக்கின்றார். இவர் மு.கா தலைவரின் மைத்துநர் என்பதோடு, அவரின் பிரத்தியேகச் செயலாளருமாகவும் கடமையாற்றுகிறார். இரட்டை இலைச் சின்னத்தைச் கொண்ட கட்சியின் செயலாளராக இஸட்.எம். ஹிதாயத்துல்லா பதவி வகிக்கின்றார். இவர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மு.காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் சகோதரராவார்.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீருக்கும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையினால்தான், தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் களமிறக்க வேண்டியேற்பட்டது.

ஹாபிஸ் நசீரும் அலிசாஹிர் மௌலானாவும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏறாவூர்காரர்கள். ஆனால், அரசியல் களத்தில் இவர்கள் பாம்பும் கீரியுமாகவே இருந்து வருகின்றனர். அதனால், ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில், இவர்கள் இருவரும் இணைந்து வேட்பாளர்களைக் களமிறக்க முடியாததொரு நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் தராசு சின்னத்தில் அலிசாஹிர் மௌலானா அணியும், யானைச் சினத்தில் ஹாபிஸ் நசீர் அணியும் களமிறங்கியுள்ளன. பிரிந்து போட்டியிடும் இவர்களின் முடிவுக்கு விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் மு.கா தலைவரும் சம்மதிக்க நேர்ந்துள்ளமைதான் இங்குள்ள சோகமான செய்தியாகும்.

இந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மரம், யானை, தராசு மற்றும் இரட்டை இலை ஆகிய நான்கு சின்னங்களில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுகிறது.

பிரிந்து கிடந்த முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸை மர்ஹும் அஷ்ரப் உருவாக்கினார்.

அந்தக் கட்சியானது, அகத்திலும் புறத்திலும் பிளவுபட்டுக் கிடப்பது, வேதனையானதாகும்.

நன்றி: தமிழ் மிரர் (19 டிசம்பர் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்