தேர்தல் கட்டளைச் சட்டம், இன்று முதல் அமுல் ; ஒலிபெருக்கி பாவனை நேரங்கள் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு
உள்ளுராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டம், இன்று திங்கட்கிழமை தொடக்கம், அமுல் செய்யப்படும் என்று, பொலிஸ் பேச்சாளரும் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் தேர்தல் பிரசாரங்களும், அரசியல் பேரணிகளும் தொந்தரவினை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஒலி பெருக்கிப் பாவனைகளுக்கு அனுமதி பெறப்பட வேண்டும் எனக் கூறியதோடு, குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டும் அவை பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கிணங்க, தேர்தல் பிரசாரத்துக்காக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும் நேரங்களையும் அவர் குறிப்பிட்டார்.
- திங்கள், செவ்வாய் கிழமை – காலை 6.00 மணி முதல், இரவு 10.00 மணி வரை.
- வெள்ளி, சனிக்கிழமை – காலை 6.00 மணி முதல், அதிகாலை (மறுநாள்) 1.00 மணி வரை.
- ஞாயிற்றுக்கிழமை – காலை 6.00 மணி முதல், நள்ளிரவு 12.00 மணி வரை.
மேலும், வேட்பாளர் பயணிக்கும் வாகனத்திலும், அரசியல் பேரணி நடைபெறும் இடத்துக்கு அருகாமையிலும், தேர்தல் விளம்பரப் பதாதைகளைக் காட்சிப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.