ஜனாதிபதி மைத்திரி, தொலைபேசி வழியாக என்னுடன் பேசினார்: முன்னாள் அமைச்சர் பசில் தகவல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீண்ட காலத்தின் பின்னர் தொலைபேசி மூலம் தன்னுடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், குறித்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் முழுமையான விளக்கமளிக்க பசில் மறுத்து விட்டார்.
அந்த தொலைபேசி உரையாடல் – நுகேகொட பிரதேசத்திலுள்ள விகாரையின் தலைமை பிக்குவான மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் மத்தியஸ்தத்துடன் இடம் பெற்றதாகவும் பசில் தெரிவித்தார்.
இந்த தொலைபேசி உரையாடல் மூலம், நான்கு – ஐந்து வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக, மைத்திரியுடன் தான் பேசியதாகவும் அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ அணியும், மைத்திரி அணியும் இணையும் சாத்தியம் குறித்து இதன்போது பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது; “அரசாங்கத்துக்கு எதிரான அணியாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பிணை முறி விவகாரம், விலைவாசி உயர்வு, மானியங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் உணர்வினை மதிக்காமை காரணமாக, அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் இதன்போது பசில் கூறினார்.