உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

🕔 December 10, 2017

– சுஐப் எம் காசிம் –

மைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரும் இணைந்து, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ எனும் பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பசீர் மற்றும் ஹசனலி ஆகியோரின் தலைமையில்,  ‘தூய முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் பெயரில் இயங்கி வந்த அணி, பின்னர் ‘ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பு’  எனும் அரசியல் கட்சியாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டு, மேற்படி கூட்டணியினை அமைத்துள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொள்ளுப்பிட்டி – ரேணுகா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தமது கூட்டிணைவு குறித்து அறிவித்ததோடு, புதிய கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிட்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலி உள்ளிட்டோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய கூட்டமைப்பின் நோக்கமும், எதிர்கால முன்னெடுப்புக்களும் வெளிப்படுத்தப்பட்டன.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவராக, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், மூத்த அரசியல்வாதியும், மு.காவின் முன்னாள் செயலாளர் நாயகமுமான ஹசன் அலியை தாங்கள் ஏகோபித்து, தேர்ந்தெடுத்துள்ளதாக இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் மு.கா.வின் உயர்பீட முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி எம்.அன்சில், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும் மு.கா. உயர்பீட முன்னாள் உறுப்பினருமான எம்..எம்தாஹிர், பொத்துவில் பிரதேச சபையின்முன்னாள் பிரதித் தவிசாளர் தாஜுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான முன்னாள் உறுப்பினர்களான ரியாஸ், கலந்தர், வி.சிஸாலிஹ், அஸுமத் அலி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர்களான ஆகியோரும் இன்றைய ஊடகவியலாளர் நந்திப்பில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்றிருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன், தவிசாளரும் பிரதியமைச்சருமமான எம்.எஸ்.எஸ். அமீரலி உட்பட, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நாட்டில் சமத்துவத்தை பேணும் வகையிலும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கிலுமே இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலியும் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து சபைகளிலும் மயில் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்ததுடன், தாம் தலைமை வகிக்கும் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பங்காளிக் கட்சியாக இருப்பதனால்> உள்ளூராட்சித் தேர்தலில் சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதோடு வேறு சில மாவட்டங்களில் தனித்தும் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலும், ஆசனப் பங்கீடு தொடர்பிலும் ஐ.தே.க. தலைமையுடன், தமது கட்சி விரிவான பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருவதாகவும், அதன் பலா பலன்களை பொறுத்து எந்தெந்த இடங்களில் இணைந்து போட்டியிடுவது, எந்தெந்த இடங்களில் தனித்துப் போட்டியிடுவது என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி கூறுகையில்;

“இந்த நிகழ்வு வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும். நாடாளுமன்றத்தில் 05 எம்.பிக்களையும், மாகாண சபையில் பல உறுப்பினர்களையும், பிரதேச சபைகளில் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் பெற்று, முஸ்லிம் அரசியலில் மிகப் பலமான கட்சியாக மிளிரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், புதிதாக உருவாக்கப்பட்ட தங்கள் கட்சியுடன் கூட்டிணைந்துள்ளதுடன், அதன் தலைமைப் பதவியையும் தமக்கு வழங்கியிருப்பது, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெருந்தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது” என்றார்.

கணிசமான கட்சியின் தலைவர்கள் தமது கட்சிகளின் அரசியல் யாப்புக்களை மாற்றிக்கொண்டு, தமது அதிகாரத்தை வலுப்படுத்தி, தலைமையை பலப்படுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், அமைச்சர் ரிஷாட் – இன்னொருவருக்கு தலைமைப் பதவியை விட்டுக்கொடுத்துள்ளமை மெய்சிலிர்க்க வைக்கின்றதெனவும் ஹசனலி கூறினார்.

தனது 32 வருடகால அரசியல் வாழ்வில் அமைச்சர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதனாலேயே, சமூகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெற புதிய வழி தேடி அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் கூட்டுச்சேர்ந்து, தாமும் தமது கட்சியின் உறுப்பினர்களும் பயணிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான மேல் மாகாணபை உறுப்பினர்  பாயிஸ், அரச வர்த்தகக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஏ.எம்ஜெமீல், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், எஸ்.எஸ்.பி. மஜீத், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், ஹுசைன் பைலா மற்றும் எம்.என்.எம். நபீல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்