உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

🕔 December 8, 2017

ள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில்  இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர், இதில் கலந்து கொண்டு, தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் மற்றும் இணைந்து போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் தொடர்பில், அந்தந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கருத்து வெளியிட்டனர்.

இதன்போது அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாகவும், இதன்போது றிசாட் பதியுத்தீன் கூறினார்.

இதற்கிணங்க, ஆசனப் பங்கீடு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும், கட்சிக்கான ஆசனப் பகிர்வில் திருப்தி ஏற்படாத பட்சத்தில், அந்த இடங்களில் தனித்துப் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்படுமெனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கண்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமென்று இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களான ஹஸனலி, பசீர் சேகுதாவூத், அன்சில், தாஹிர் மற்றும் நசார் ஹாஜியார் உள்ளிட்டோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் உறுதியான முடிவை கட்சித்தலைமை அறிவிக்குமென்றும் இந்தக் கூட்டத்தில் தவிசாளர் அமீர் அலி தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கண்டி, கொழும்பு, திருகோணமலை, சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த, பல்வேறு கட்சிகளில் அங்கம் வகிப்போர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் செயலாளர் மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன், தவிசாளர் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மஹ்ரூப், மாகாணசபை உறுப்பினர்களான பாயிஸ், அலிகான் மற்றும் ஷரீப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்