மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ்
– றியாஸ் ஆதம் –
அம்பாரை மாவட்டடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், சிராஸ் மீராசாஹிப் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளப்போவதாக போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்; சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரசில் சிராஸ் மீராசாகிப் இணைந்து கொள்ளப்போவதாக வெளியான செய்தி தொடர்பாக, ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கு அம்பாரை மாவட்டத்தில் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. இதனை சகித்துக்கொள்ள முடியாத சில விசமிகள் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்ப முற்படுகின்றனர். அதற்காக என்னைப் பயன்படுத்தி, முஸ்லிம் காங்கிரசில் நான் இணையப்போவதாக பிரச்சாரம் செய்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரசிலிருந்து நான் அவமானப்படுத்தப்பட்டு, இரவோடு இரவாக எனது மேயர் பதவியும் பறிக்கப்பட்டு, கட்சியை விட்டு தூக்கியெறியப்பட்டவன். சாய்ந்தமருது மக்களின் ஆணையைப் பெற்று மேயராகத் தெரிவான என்னையும், சாய்ந்தமருது மண்ணையும் ஏமாற்றி துரோகமிழைத்த தலைமையோடு, எப்படி நான் இணைந்துகொள்வது? இதற்கு ஒருபோதும் எனது மனச்சாட்சி இடம்கொடுக்காது.
எனக்கு தற்போது அம்பாரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் ஆதரவினை இல்லாமல் செய்வதற்கு, பல யுக்திகளை கையாளுகின்றனர். ஆனால், நானோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த வேட்பாளர்களோ ஒருபோதும் முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து கொள்ளப்போவதில்லை. நாங்கள் தெளிவான கட்சியோடும் எமது சமூகத்திற்காக தைரியமாக குரல் கொடுக்கின்ற தலைமையோடும் இணைந்துள்ளோம். எனவே எதிர்வரும் காலங்களில் தலைவர் ரிஷாட் பதியுத்தீனின் கரங்களைப் பலப்படுத்தி, அம்பாரை மாவட்டத்தில் பல பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
எமது சமூகத்தினை ஏமாற்றிய காலம் முடிந்துவிட்டது. இப்போது சரியான தலைமைத்துவத்தினை மக்கள் இணங்கண்டுள்ளார்கள். எனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையினை பலப்படுத்தி, எமது சமூகத்தினை பாதுகாக்க சகலரும் ஒன்றினைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.