சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட மஹிந்த அணி; கட்டுப்பணம் இன்று செலுத்தியது
– பாறுக் ஷிஹான் –
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, மகிந்த ராஐபக்ஷ அணியின் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, யாழ்ப்பாணம் உதவி தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
பொதுஜன பெரமுன சார்பாக யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ், சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாணம் உதவி தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினார்.
இதன்போது, யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் கருத்து வெளியிடுகையில்;
நாடளாவிய ரீதியில் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், அந்த வகையில் தாம் யாழ் மாவட்டத்தின் ஏனய பகுதிகளுக்குமான தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளதாவும் தெரிவித்தார்
மேலும் மகிந்த ராஜபக்விஷனால் மாத்திரமே தமிழ் மக்காளுக்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முடியும் என்றும், அது மாத்திரமல்லாது அபிவிருத்தியை தமது கட்சியினரால் மாத்திரமே சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் கூறினார்.
அதேவேளை தாமரை மொட்டு சின்னத்தில் தமது கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி. (ஈழமக்கள் ஜனநாயக கட்சி) யில் முக்கிய பதவிகளை வகித்தவர்களே, தற்போது மகிந்த ஆதரவு கட்சியில் இணைந்து, அந்தக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர்.
இதேவேளை சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக ஈ.பி.டி.பி. முதன்முதலாக கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தது.