அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

🕔 November 29, 2017

 

– சுஐப் எம். காசிம் –

தொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த விசாரணைக்குத் தேவையான தரவுகளை உள்ளக கணக்காய்வு பிரிவு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தின், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் குழுநிலை விவாதத்தில், பொறுப்புக்குரிய  அமைச்சர் எனும் வகையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் கூறுகையில்;

“நாடாமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் சதொச நிறுவனம் தொடர்பில் பிழையான எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க முனைகின்றார். அப்பட்டமான பொய்களையும் இந்த உயர் சபையிலே கூறுகின்றார்.

நஷ்டத்தில் இயங்கும் சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்றதன் பின்னர், அது லாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றது. ஒன்றரை பில்லியன் வரையிலிருந்த சதொசவின் விற்பனைப் புரல்வை, மூன்று பில்லியனாக நாம் அதிகரித்துள்ளோம்.

சாதாரண மக்களுக்கு கை கொடுத்து உதவும் இந்த சதொச நிறுவனத்தின் நடவடிக்கைகளை நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொண்டு வருகின்றோம்.

இரண்டு வருடங்கள் இந்த நாட்டிலே மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி காரணமாகவே, அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்திக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், அவை வெளிப்படைத் தன்மையாகவே இருக்கின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்